FACT CHECK: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

அரசியல் | Politics இந்தியா | India தேசியம்

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அம்மாநில அரசு தடை செய்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கேரளாவில் RSS இயக்கத்தை தடை செய்து கேரள மாநில அரசு உத்தரவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Shali Mary என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2021 டிசம்பர் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்யும் அளவுக்கு மோதல் நீடித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என்று பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சூழலில் டிசம்பர் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியது. 

இந்த சூழலில் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு கேரள அரசு தடை விதித்தது என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஏராளமானவர்கள் இதை ஷேர் செய்யவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டிருந்தால், நாடு முழுக்க மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும். தமிழ்நாட்டில் காட்சி ஊடகங்கள் அது பற்றி விவாதித்திருப்பார்கள். மிகப்பெரிய அளவில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இவர்களாக வதந்தி பரப்பியிருக்கலாம் என்று தெரிகிறது.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதா, தடை விதிக்க ஆலோசனை செய்யப்படுகிறதா… அது பற்றி ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். பல ஆண்டுகளாகவே கேரள கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் முகாம்கள், கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதற்கு தடை விதிக்கப்படுவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக செய்திகள் கிடைத்தன. கடந்த 2021 ஏப்ரல் மாதம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசுக்கு சொந்தமான கோவில் இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதித்ததாக செய்திகள் கிடைத்தன. மற்றபடி ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதாகவோ, தடை விதிக்க ஆலோசனை நடப்பதாகவோ எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: newindianexpress.com I Archive

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதாகப் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False