FACT CHECK: மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் 16ம் தேதி காலமானார் என்று பரவும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மன்மோகன் சிங் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இதய அஞ்சலி.. இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் காலமானார். உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை பிரியாத வரம் வேண்டும் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Siva Vj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 அக்டோபர் 16ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளது என்றும் டெல்லி எய்ம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive 1 I indianexpress.com I Archive 2

இந்த சூழலில் மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் 16ம் தேதி இறந்துவிட்டார் என்று சமூக ஊடகங்களில் கண்ணீர் அஞ்சலி பதிவுகள் வைரலாக பகிரப்பட்டன. சமூக ஊடகங்களில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் பதிவுகள் பல பகிரப்பட்டு வருகின்றன. 

மன்மோகன் சிங் உடல் நலம் குறித்து அவரது உடல் நிலை அபாய கட்டத்தில் உள்ளது என்று யாராவது கூறினார்களா என்று தேடிப் பார்த்தோம். அப்போது, ஜார்கண்ட் மாநில அமைச்சர் ஒருவர் மன்மோகன் சிங் மரணமடைந்துவிட்டார் என்று அவருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் பின்னர் தன்னுடைய தவற்றைத் திருத்திக்கொண்டு மன்னிப்பு கேட்டதாகவும் செய்தி கிடைத்தது.

அசல் பதிவைக் காண: abplive.com I Archive

சமூக ஊடகங்களில் பலரும் வதந்தி பரப்பவே தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மன்மோகன் சிங் உடல் நிலை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்று கேட்டு ட்வீட் வெளியிட்டிருப்பது நமக்குக் கிடைத்தது.

Archive

2021 அக்டோபர் 18ம் தேதி வரையில் மன்மோகன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுதான் வருகிறார். அவர் உடல் நலம் சீராக உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அவரது குடும்பத்தினரும் மன்மோகன் சிங் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே, மன்மோகன் சிங் மறைந்துவிட்டார் என்று யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்!

அரசியல் தலைவர், சினிமா பிரபலங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலே கண்ணீர் அஞ்சலி பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிடுகின்றன. முன்பு இதே போன்று பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கர் மற்றும் தமிழ்த் திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பிரபலங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே அவர்கள் காலமாகிவிட்டதாக வதந்தி பரவியது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணமடைந்துவிட்டார் என 2020 ஆகஸ்ட் 14ம் தேதி வதந்தி பரப்பினர். சிகிச்சை பலனின்றி அவர் செப்டம்பர் 25, 2020 அன்று காலமானார்.

கண்ணீர் அஞ்சலி பதிவிட காரணம் தலைவர்கள், பிரபலங்கள் மீது உள்ள அதீத அன்பா அல்லது அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற ஆசையா என்று தெரியவில்லை. உண்மையில் இப்படி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் தலைவர்கள், பிரபலங்கள் மீது உண்மையான அன்பு இருந்தால், அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகும் வரை அவர்கள் முழு உடல் நலம் பெற்று வீடு திரும்பப் பிரார்த்தனை செய்வதே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.

முடிவு:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்துவிட்டார் என்று பரவும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் 16ம் தேதி காலமானார் என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False