
‘’மோடி இனி கனடா வரக்கூடாது,’’ என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
18 டிசம்பர் 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி பெயரில் ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளனர். அதில், மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படங்களை வைத்து, ‘’தமிழர்களை தொடர்ந்து புறக்கணிக்கும் இந்திய பிரதமர் மோடி, இனி கனடா மண்ணில் கால் வைக்கக்கூடாது,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். நமது வாசகர்கள் சிலர் இது உண்மையா என்று, வாட்ஸ்ஆப் வழியே நம்மிடம் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டு, தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டிருந்தாலும், அதனை பார்க்கும்போதே, போலியாக தயாரிக்கப்பட்ட ஒன்று என சந்தேகமின்றி தெளிவாகிறது.
அதில் உள்ள ஃபாண்ட் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்கள் அனைத்துமே மரபுப் பிழையாக உள்ளன. அத்துடன், இப்படி நேரடியாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி செய்திருந்தால், சர்வதேச அரசியலில் மிகப்பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு செய்தி கூட ஊடகங்களில் நாம் கண்டதில்லை.
இதுதவிர, குறிப்பிட்ட நியூஸ் கார்டு உண்மையா என்ற சந்தேகத்தில், தந்தி டிவி ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர்கள், ‘’இது போலியாக தயாரிக்கப்பட்ட ஒன்று,’’ என்று தெரிவித்தனர்.
சமீபத்தில், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியிருந்தார். அதற்கு, இந்திய அரசு தரப்பில் கண்டனம் கூட தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், இந்த போலியான நியூஸ் கார்டை சிலர் ஷேர் செய்து வருவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மோடி இனி கனடா வரக்கூடாது என்று ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
