Fact Check: கடலூரில் பாஜக.,வுக்கு வாக்களித்த பெண் அடித்துக் கொல்லப்பட்டாரா?
‘’கடலூரில் பாஜக.,வுக்கு வாக்களித்த பெண் அடித்துக் கொலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை
#cuddalore #Incident #Nakkheeran #electionupdate2024,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவின் அடிப்படையில், நக்கீரன் உள்பட பல்வேறு ஊடகங்களும் மேற்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளன.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, இதுதொடர்பாக, கடலூர் மாவட்ட போலீசார் தரப்பில் ஏற்கனவே மறுப்பு வெளியிடப்பட்டதாக, தெரியவந்தது.
இதன்படி, மே 19, 2024 அன்று மாலை, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பத்தினர் இடையே நீண்ட நாளாக இருந்து வந்த முன் விரோதம் காரணமாக, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டபோது கோமதி என்ற பெண் கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளார். போலீசார் வழக்குப் பதிந்து, 5 பேரை கைது செய்துள்ளனர்.
ஆனால், உண்மை விவரம் தெரியாமல், மே 19, 2024 அன்று மாலை இந்த சம்பவம் நடைபெற்றதால், பாஜக.,வுக்கு ஓட்டுப் போட்டதால்தான் அந்த பெண் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறி அண்ணாமலை உள்பட பாஜக ஆதரவாளர்கள் பலரும் வதந்தி பரப்பியுள்ளதாக, தெரியவருகிறது. இதன் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல், பல்வேறு ஊடகங்களும் அவசர கதியில் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
மேலும், ட்விட்டர் பயனாளர் ஒருவர் தொடர்ச்சியாக இதுபற்றி தகவல் பகிர்ந்து வந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், வேறொரு சம்பவம் காரணமாக நிகழ்ந்த மரணத்தை, பாஜக.,வுக்கு ஓட்டுப் போட்டதால் பெண் அடித்துக் கொலை என்று கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:Fact Check: கடலூரில் பாஜக.,வுக்கு வாக்களித்த பெண் அடித்துக் கொல்லப்பட்டாரா?
Written By: Fact Crescendo TeamResult: False