மேட்டூரில் குடியிருப்புக்குள் காவிரி நீர் புகுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற வீடியோ ஒன்றை அனுப்பி, அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், ஆற்று நீர் மிக வேகமாக ஊருக்குள் வருகிறது. "மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரி பட்டினத்தில் குடியிருப்புக்குள் காவிரி ஆற்று வெள்ளம் புகுந்தது! ஆபத்தான நிலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்களா என்று பார்த்தோம். இந்த வீடியோவை Vellore Social Media என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஆகஸ்ட் 4ம் தேதி பதிவிட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் அளவு அதிகமாக உள்ளது. அதனால், மிக அதிக அளவில் மேட்டூர் அணையிலிருந்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் மேட்டூரில் ஒரு குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்தது என்று வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

காவிரி பாயும் பல பகுதிகளில் கரையோரம் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாக இரண்டு மூன்று நாட்கள் வீடியோவுடன் கூடிய செய்திகள் வெளியாகி வருகின்றன. எனவே, முதலில் இந்த வீடியோவை ஜூனியர் விகடன் வெளியிட்டதா என்று பார்த்தோம். அதன் சமூக ஊடக பக்கங்களில் இந்த வீடியோ இல்லை. ஆனால், பலரும் ஜூனியர் விகடன் வெளியிட்டதாக பகிர்ந்து வரவே, இது குறித்து ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

அப்போது அவர் இந்த வீடியோ பதிவை ஜூனியர் விகடன் வெளியிட்டது உண்மைதான். அந்த பகுதியைச் சேர்ந்த நிருபர் உறுதியாக கூறியதால் இதை வெளியிட்டோம். அதன் பிறகு இது தவறான வீடியோ என்று தெரிந்ததும் அகற்றிவிட்டோம்" என்றார்.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று அறிய வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2021ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. 2021 நவம்பர் 19ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில் மண்டப்பள்ளி வெள்ளம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடிய போது இந்த வீடியோ ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டப்பள்ளி என்ற ஊரில் நடந்தது என்று தெரியவந்தது.

ஜூனியர் விகடன் ஆந்திராவில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை தவறுதலாக மேட்டூரில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளது. தவறு என்று தெரிந்ததும் ஜூனியர் விகடன் அதை அகற்றிவிட்டது. ஆனால், சமூக ஊடகங்களில் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மேட்டூரில் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது என்று ஜூனியர் விகடன் வெளியிட்ட வீடியோ 2021ல் ஆந்திரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மேட்டூரில் குடியிருப்புக்குள் காவிரி நீர் புகுந்ததாக பரவும் பழைய வீடியோ!

Fact Check By: Chendur Pandian

Result: False