ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிப்பது போன்றது அதிமுக – பாஜக பிரிவு என்று ஜெயக்குமார் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

அ.தி.மு.க – பா.ஜ.க பிரிவை ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிப்பது போன்ற தற்காலிகமான பிரிவு என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இது தற்காலிகமான பிரிவுதான். ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரிப்பது போல காலம் அதிமுகவையும் பாஜகவையும் தற்காலிகமாக பிரித்திருக்கிறது – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்” என்று இருந்தது. இந்த பதிவை Fros Khan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 6ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அ.தி.மு.க-வில் தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து வருபவர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். இதனால் அவரைப் பற்றி அவ்வப்போது போலியான நியூஸ் கார்டுகள் வெளியாவது தொடர்கிறது. அதுவும் பெண்கள் விஷயத்தில் தொடர்புப்படுத்தி அவரை சிறுமைப்படுத்தும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அ.தி.மு.க – பா.ஜ.க இடையே உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி முறிவு தொடர்பாக ஜெயக்குமார் தெரிவித்த கருத்து என்று ஒரு விஷமத்தனமான கருத்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் ஜனவரி 31, 2022 அன்று தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் ஜெயக்குமார் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு இருந்தது. ஆனால் அதில், “பாஜக தனித்து போட்டியிடுவது அக்கட்சித் தலைமை எடுத்த முடிவு – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. எனவே, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு இது குறித்து கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார்.

அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இப்படி ஏதும் கருத்தைத் தெரிவித்தாரா என்று அவருடைய பேட்டியைப் பார்த்தோம். யூடியூபில் அவருடைய பேட்டி இருந்தது. அதில் அவர் அவ்வாறு கூறவில்லை. 

இந்த நியூஸ் கார்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி இது குறித்துக் கேட்டோம். அவர் தரப்பில் நம்மைத் தொடர்புகொண்ட அவரது உதவியாளர், இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பது போன்ற பிரிவுதான் அதிமுக பாஜக கூட்டணி பிரிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிப்பது போன்றது அதிமுக – பாஜக பிரிவு என்று ஜெயக்குமார் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False