
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு பறந்த தாலிபான்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஹெலிகாப்டரில் ஒருவர் தொங்கிக்கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு பறந்த தலிபான்கள்.! ஆப்கானிஸ்தான் கந்தஹார் மாகாணத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரில் கீழ் கயிற்றில் தொங்கிய உடலுடன் பறந்த தலிபான்கள்” என்று நீண்ட பதிவு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Namo Ananthan என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 31 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் பற்றி பல தகவல்கள் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவை கூகுளில் தேடினோம். அப்போது, மாலை மலர் இந்த செய்தியை வெளியிட்டிருப்பது தெரியவந்தது. மாலைமலரில் வெளியான செய்தியை அப்படியே காப்பி செய்து வீடியோவுடன் பதிவிட்டுள்ளனர். எனவே இந்த செய்தி உண்மையானது தானா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I maalaimalar.com I Archive 2
வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பல செய்தி ஊடகங்களில் தாலிபான்கள் ஹெலிகாப்டரில் உடலை கட்டி தொங்கவிட்டு பறந்தனர் என்று குறிப்பிட்டு பல செய்திகள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்திலும் இது தொடர்பான உண்மை கண்டறியும் ஆய்வு வெளியாகி இருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தொடர்ந்து தேடிய போது தாலிபான்கள் கந்தகார் அரசு கட்டிடத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் தாலிபான்கள் கொடியை ஹெலிகாப்டர் உதவியுடன் ஏற்ற முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது என்று சில வீடியோக்கள் ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பகிரப்பட்டு வருவதும் நமக்குக் கிடைத்தது.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலப் பிரிவு வெளியிட்ட செய்தியைப் பார்த்த போது, தாலிபான்கள் ஹெலிகாப்டரில் யாரையும் தொங்கவிட்டு கொலை செய்யவில்லை என்று ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் உறுதி செய்ததாக குறிப்பிட்டிருந்தனர். அந்த ஊடகவியலாளரின் ட்வீட்டில், “நான் அந்த ஹெலிகாப்டரை இயக்கிய விமானியை தொடர்புகொண்டேன். அவர் எனக்கு நன்கு அறிமுகம் ஆனவர். தாலிபான்கள் தங்கள் கொடியை கம்பத்தில் கட்ட முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது எனவும் அவர் கூறினார்” என்று இருந்தது.
இதன் மூலம், உயரமான கொடிக் கம்பத்தில் ஹெலிகாப்டர் உதவியுடன் கொடியை பறக்கவிட முயற்சி செய்த தாலிபான்களின் வீடியோவை எடுத்து, தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் தாலிபான்கள் ஹெலிகாப்ரில் சடலத்தைத் தொங்கவிட்டு கொண்டு சென்றனர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தாலிபான்கள் ஓடும் ஹெலிகாப்டரில் சடலத்தை தொங்கவிட்டனர் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்க விட்டனரா தாலிபான்கள்?
Fact Check By: Chendur PandianResult: False
