FACT CHECK: பிரான்ஸ் தயாரிப்புகளை இஸ்லாமிய நாடுகள் பாலைவனத்தில் கொட்டி அழித்தனவா?

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

பிரான்ஸ் நாட்டின் தயாரிப்புகளை அப்புறப்படுத்தி கழிவாக வீசப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

பாலைவனத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கண்டெய்னர் லாரிகளில் இது பொருட்களை வீசும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாஸா அல்லாஹ்கண்மணி நாயகம்(ஸல்) அவர்களை கார்ட்டூன் வரைந்து இழிவு படுத்திய பிரான்ஸ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்தி கழிவுகளாக வீசப்படும் காட்சி என்று கூறப்பட்டுள்ளது. 

Halaldeen Abdul Majeed என்பவர் 2020 நவம்பர் 1ம் தேதி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். ஏராளமானோர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரான்சில் இஸ்லாமியர்களின் தூதர் முகமது நபி தொடர்பாக கேலி சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டிய பள்ளிக்கூட ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயத்தில் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் உள்ளே இருந்தவர்களை கழுத்தை அறுத்து கொலை செய்தான். இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரான்ஸ் அரசின் செயல்பாடு தங்கள் மத உணர்வுக்கு எதிராக உள்ளது என்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பிரான்ஸ் பொருட்களைப் புறக்கணித்தும் வருகின்றனர். இந்த நிலையில், பாலைவனத்தில் பிரான்ஸ் பொருட்கள் கழிவாக அப்புறப்படுத்தப்படுகிறது என்று பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று கூறப்படவில்லை. பாலைவன காட்சிகள் தெரிவதால் அரசு நாடுகளாக இருக்கலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் முகமது நபியை இழிவுபடுத்திய பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கழிவுகளாக வீசப்படுகிறது என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் 2020 அக்டோபரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்றே பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை 2016ம் ஆண்டு பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததைக் காண முடிந்தது. “இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டதால் பாகிஸ்தான் அரசு தான் அடித்து வைத்திருந்த கள்ள ரூபாய் நோட்டுக்களை அழிக்கிறது” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

YouTube

தொடர்ந்து தேடிய போது, ahmedabadmirror.indiatimes.com என்ற தளத்தில் பாகிஸ்தான் கள்ள ரூபாய் நோட்டுக்களை அப்புறப்படுத்தியதாக பகிரப்படும் சௌதி அரேபிய வீடியோ என்று குறிப்பிட்டிருந்தனர். 80 ஆயிரம் கெட்டுப்போன கோழி இறைச்சியை சௌதி அரேபியா அப்புறப்படுத்தியது என்றும் கூறியிருந்தனர்.

அசல் பதிவைக் காண: indiatimes.com I Archive

இதன் அடிப்படையில் சௌதி அரேபியா, கெட்டுப் போன கோழி இறைச்சி என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது 2016 நவம்பர் 17ம் தேதி சௌதி ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி மற்றும் வீடியோ கிடைத்தது. 

அதில் “80 ஆயிரம் கெட்டுப் போன கோழி இறைச்சியை அல்-காசிம் (al-Qassim) மாவட்ட நிர்வாகம் கண்டறிந்தது. காலாவதியான கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு 25 டிரக்குகளில் கொண்டு செல்லப்பட்டு பாலைவனத்தில் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது” என்று கூறப்பட்டிருந்தது. அந்த செய்தியில் வீடியோவும் இருந்தது.

அசல் பதிவைக் காண: alarabiya.net I Archive

இதன் மூலம் 2016ம் ஆண்டு சௌதி அரேபியாவில் எடுக்கப்பட்ட, கெட்டுப் போன கோழி இறைச்சிகளை அப்புறப்படுத்தும் வீடியோவை, தற்போது பிரான்ஸ் சம்பவத்துடன் தொடர்புப்படுத்திப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சௌதி அரேபியாவில் 2016ம் ஆண்டு கெட்டுப் போன கோழி இறைச்சி அப்புறப்படுத்தப்பட்ட வீடியோவை பிரான்ஸ் பொருட்கள் அழிக்கப்படுவதாக தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உரிய ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பிரான்ஸ் தயாரிப்புகளை இஸ்லாமிய நாடுகள் பாலைவனத்தில் கொட்டி அழித்தனவா?

Fact Check By: Chendur Pandian 

Result: False