
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக் கிடங்கைத் திறந்து வைத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றை, மு.க.ஸ்டாலின் கொரோனா சிகிச்சை கூடுதல் படுக்கை வசதியை திறந்து வைக்கும் படத்துடன் சேர்த்து பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்ன காலகொடுமைடா சாமி அரசில் வரலாற்றில்….. ஒரு முதல்வர் பிணக்கிடங்கை திறப்பது இதுவே முதல்முறை…. இதற்கு பெயர் தானோ விடியல் அரசு…. ஸ்டாலின் தான் வராரு விடியலை தான் தராபோராரு சொன்னாங்க….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை சுகுமார் திருப்பூர் தெற்கு மாவட்டம் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 மே 22ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ் படம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “சிவா பிணக்கிடங்கு” திறப்பு விழா படத்தை மு.க.ஸ்டாலின் படத்துடன் இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. கொரோனா உயிரிழப்பு விஷயம் மிகவும் சீரியஸ் ஆனது என்பதால் இது காமெடி என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை. மேலும், நிலைத் தகவலில், “ஒரு முதல்வர் பிணக்கிடங்கை திறந்து வைப்பது வரலாற்றில் இதுவே முதன்முறை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மு.க.ஸ்டாலின் பிணக் கிடங்கை திறந்து வைத்தார் என்று உறுதியாக கூறுகின்றனர். எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவுபற்றி தேடினோம். ஆனால், சரியான முடிவுகள் கிடைக்கவில்லை. இதனால், முதல்வர், மு.க.ஸ்டாலின், கொரோனா கூடுதல் படுக்கை, திறப்பு என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, சேலத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார் என பல செய்திகள் நமக்குக் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive
இது தொடர்பான வீடியோ ஏதும் கிடைக்கிறதா என்று யூடியூபில் தேடினோம். அப்போது முன்னணி ஊடகங்களில் வெளியான செய்தி மற்றும் வீடியோக்கள் கிடைத்தன. அவற்றில் அவர் திறந்து செய்த முழு காட்சிகளும் இல்லை. அதே நேரத்தில் Karur boomi என்ற யூடியூப் சேனல் வெளியிட்டிருந்த வீடியோ கிடைத்தது. அதில் மு.க.ஸ்டாலின் 500 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து உள்ளே சென்று பார்வையிட்ட முழு காட்சியும் இருந்தது.
ஃபேஸ்புக் பதிவர் எதன் அடிப்படையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை பிணக் கிடங்கு என்று குறிப்பிட்டார் என்று தெரியவில்லை. நம்முடைய ஆய்வில் மு.க.ஸ்டாலின் சேலத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்த படத்தை பிணக் கிடங்கு திறந்து வைத்தார் என்று விஷமத்தனமாக பகிர்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மு.க.ஸ்டாலின் பிணக் கிடங்கு திறந்து வைத்தார் என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மு.க.ஸ்டாலின் பிணக்கிடங்கை திறந்து வைத்தார் என்று பகிரப்படும் படம் சேலத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஸ்டாலின் திறந்து வைத்தது பிணக்கிடங்கா? – விஷம பதிவு
Fact Check By: Chendur PandianResult: False
