
பொங்கல் பரிசு வாங்கிய கையோடு சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும். பொங்கல் பரிசு வாங்கிய கையோடு சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவும் – முதல்வர் பழனிசாமி” என்று உள்ளது.
இதை பி.கே.சக்திவேல் தி.மு.க. என்பவர் 2020 டிசம்பர் 21ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்குகிறது. தேர்தல் வர உள்ள நிலையில் இதுவரை ரூ.1000 ஆக இருந்த பொங்கல் உதவித் தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் அறிவிப்பை எல்லா ஊடகங்களும் வெளியிட்டன. அவர் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கூறியிருந்தால் அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். அது போல ஒரு துணுக்கு செய்தி கூட வெளியாகவில்லை.
எனவே, புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஒருவர் இருவர் இதை பகிர்ந்திருந்தால் கூட பரவாயில்லை, ஏராளமானவர்கள் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது போலியானது என்று உறுதி செய்வதற்கான ஆய்வை செய்தோம்.
முதலில் புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் அசல் நியூஸ் கார்டை தேடினோம். அப்போது 2020 டிசம்பர் 19ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு கிடைத்தது. அதில், “ஒரு கிலோ அரிசி, ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரியும் வழங்கப்படும்” என்று இருந்தது. இந்த பகுதியை மாற்றி தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள் என்று தவறான தகவல் சேர்த்திருப்பது தெரிந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இது தொடர்பாக புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு ஹெட் மனோஜ் குமாரிடம் கேட்டோம். அப்போது, “இது போலியானது. பலரும் இதை ஷேர் செய்து வருவதாக எங்களுக்கும் புகார் வந்துள்ளது” என்றார்.
நம்முடைய ஆய்வில், புதிய தலைமுறை வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு கிடைத்துள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நம்மிடம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “பொங்கல் பரிசு வாங்கிய கையோடு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தி.மு.க-வுக்கு வாக்களிக்கச் சொன்ன எடப்பாடி பழனிசாமி?- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: Altered
