
ஒன்றிய அரசு என்று கூறி வந்த மு.க.ஸ்டாலின், நிதி உதவி பெறுவதற்காக மத்திய அரசு என்று குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
“நெடுஞ்சாலைத் திட்டம்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!” என்று அச்சு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் புகைப்படத்தை யாரோ ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பதிவிட்டுள்ளனர். செய்தியில் மத்திய அரசு என்று வரும் பகுதிகள் எல்லாம் சிவப்பு நிறத்தில் நீள் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் நிலைத் தகவல் பகுதியில், “அது என்ன பணம் வாங்க மட்டும் மத்திய அரசு..!! பழி போடும்போது மட்டும் ஒன்றிய அரசு..??” என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த பதிவை 200 ரூபாய் உபி என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 நவம்பர் 22ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசு என்று அழைப்பதற்குப் பதில் ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறார். ஒன்றிய அரசு என்று அழைப்பதை பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசு என்று அழைப்பதுதான் சரி, ஒன்றிய அரசு என்று கூறுவது தவறு என்று அதை ஒரு பிரச்னையாகவே மாற்றினர். நீதிமன்றம் வரையிலும் பிரச்னை சென்றது. அப்படி அழைப்பதில் தவறு இல்லை என்று உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்திவிட்டது. மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க-வினர் தொடர்ந்து ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகிறது.
மு.க.ஸ்டாலின், தி.மு.க-வினர் “ஒன்றிய அரசு” என்று கூறினாலும், பெரும்பாலான ஊடகங்கள் அதை “மத்திய அரசு” என்றே அதை மாற்றி எழுதி வருகின்றன. இந்த சூழலில் ஏதோ ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தியை வைத்துக்கொண்டு, மு.க.ஸ்டாலின் பணம் வாங்குவதற்காக பழையபடி மத்திய அரசு என்று கூறியுள்ளார் என்று பா.ஜ.க ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நிதி உதவி பெறுவதற்காக ஒன்றிய அரசு என்று கூறுவதை நிறுத்திவிட்டு, மத்திய அரசு என்று ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மட்டும் ஒன்றிய அரசு என்று கூறுகிறார் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் ஸ்டாலின் தன்னுடைய கடிதத்தில் மத்திய அரசு என்று குறிப்பிட்டாரா என்று ஆய்வு செய்தோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டிருந்தது. அதை மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தனர். அதைப் பார்த்தோம். கடிதம் ஆங்கிலத்திலிருந்தது. அது பற்றிய செய்தி வெளியீட்டில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசு என்று எந்த இடத்திலும் இல்லை.
ஆங்கிலத்தில் வெளியான கடிதத்தை மொழிமாற்றம் செய்து செய்தியாக வெளியிட்ட ஊடகம், மத்திய அரசு என்று குறிப்பிட்டுள்ளது. ஊடகத்தில் வெளியான செய்தியை வைத்துக்கொண்டு, அதன் பின்னணியைப் பற்றித் தெரியாமல் மு.க.ஸ்டாலின் நிதி பெறுவதற்காக மத்திய அரசு என்று கூறிவிட்டார் என்று தவறான தகவலைப் பரப்பியுள்ளனர்.

நம்முடைய ஆய்வில்,
பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதம் தொடர்பான செய்தி வெளியீடு கிடைத்துள்ளது.
அந்த செய்தியில் ஒன்றிய அரசு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்திலிருந்த கடிதத்தை மொழிபெயர்ப்பு செய்தவர்கள், மத்திய அரசு என்று எழுதியுள்ளனர்.
இதன் அடிப்படையில், நிதி உதவி பெறுவதற்காக இதுவரை ஒன்றிய அரசு என்று கூறி வந்த மு.க.ஸ்டாலின், தற்போது மத்திய அரசு என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஒன்றிய அரசு என்று கூறி வந்த ஸ்டாலின், பணம் வாங்குவதற்காக மத்திய அரசு என்று கூறியுள்ளார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நிதி உதவிக்காக மத்திய அரசு என்று கூறினாரா மு.க.ஸ்டாலின்?
Fact Check By: Chendur PandianResult: False
