FACT CHECK: தமிழகம் ஜிஎஸ்டி பங்கை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

தமிழகம் போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் ஜிஎஸ்டி-யில் தங்கள் பங்கை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி புகைப்படத்துடன் தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகம் போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் உ.பி, ம.பி போன்ற பின்தங்கிய மாநிலங்களின் நலனுக்காகவும் தேசத்தின் நலனுக்காகவும் ஜி.எஸ்.டியில் தங்கள் பங்கை விட்டுக்கொடுக்கவேண்டும் – மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி” என்று இருந்தது.

இந்த பதிவை Nazar Dravidian என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 செப்டம்பர் 27ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ரேடியோவில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். 2021 செப்டம்பர் மாதத்துக்கான மனதில் குரல் செப்டம்பர் 26ம் தேதி ஒலிபரப்பப்பட்டது.

இந்த சூழலில், மனதில் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடி, தமிழகம் போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் ஜி.எஸ்.டி-யில் தங்கள் பங்கை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறியதாக சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டிய விஷயத்தை இப்படி பொது நிகழ்ச்சியில் கூற வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று பார்த்தோம்.

முதலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்டதா என்று பார்க்க அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற புகைப்பட பதிவை செப்டம்பர் 26ம் தேதி தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்டிருப்பது தெரியவந்தது.

அதில், “மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் பண்டிகை காலத்தின் போது, காதி மற்றும் கைத்தறி தொடர்பான பொருட்களை மக்கள் அதிக அளவில் வாங்க வேண்டும் – பிரதமர் திரு நரேந்திர மோடி. 81வது மனதில் குரல் நிகழ்ச்சியில் உரை” என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook

இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து, தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது தெரியவந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை சற்று பெரிதுபடுத்திப் பார்த்த போது, “81வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரை” என்று இருந்த பகுதி அழிக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.

சமீபத்திய மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி பங்கை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினாரா என்று அறிய, மனதில் குரல் நிகழ்ச்சி பதிவை பார்த்தோம். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியில் மட்டுமே பேசுவார். எனவே, அவரது உரையின் தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகளை அவருடைய இணையதளத்திலிருந்து எடுத்தோம். அதில், ஜிஎஸ்டி தொடர்பாக அவர் எதையும் பேசவில்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: pmindia.gov.in I Archive 1 I narendramodi.in I Archive 2

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் ஜிஎஸ்டி பங்கை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஜிஎஸ்டி பங்கை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக பரவும் புகைப்படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழகம் ஜிஎஸ்டி பங்கை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False