
‘’பாஜக.,வை தடை செய்ய வேண்டும், அண்ணாமலை கேவலமான அரசியல்வாதி,’’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட செய்தியில், ‘’அண்ணாமலை கேவலமான அரசியல்வாதி. பாஜக தடை செய்யப்பட வேண்டிய கட்சி. மாணவி இறப்பை வைத்து மதக்கலவரம் செய்ய நினைத்த அண்ணாமலையை கைது செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,’’ என எழுதப்பட்டுள்ளது.
இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
Facebook Claim Link I Archived Link
இதே செய்தியை அச்சு மாறாமல் அப்படியே ABP Nadu லோகோவுடன் சிலர் பகிர்வதையும் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
சமீபத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத மாற்றம் இதற்கு காரணமாக இருக்குமோ என்று பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பி வரும் சூழலில், பலர் இதனை மறுத்தும் வருகின்றனர்.
இந்த சூழலை பின்னணியாக வைத்து, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மற்றும் பலரை மையப்படுத்தி ஏராளமான வதந்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவை பற்றி நாமும் வரிசையாக ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.
அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு போலியான செய்தியே மேலே நாம் கண்ட இரண்டு நியூஸ் கார்டுகளும். இதுபற்றி நாம் முறையே தந்தி டிவி மற்றும் ABP Nadu ஆகியவற்றின் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு, உறுதிப்படுத்தியுள்ளோம். இவற்றை தாங்கள் வெளியிடவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:பாஜக.,வை தடை செய்ய கோரினாரா சீமான்? விதவிதமாக பகிரப்படும் வதந்திகள்…
Fact Check By: Pankaj IyerResult: False
