
டெல்லியில் பட்டப்பகலில் இந்து பெண் ஒருவரை லவ் ஜிகாத் செய்து ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞர் கத்தியால் குத்தி படுகொலை செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
1.41 நிமிட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பெண்மணி ஒருவருடன் ஆண் ஒருவர் பேசிக்கொண்டு இருக்கிறார். திடீரென்று கத்தியை எடுத்து சரமாரியாக, அந்த பெண்ணை, அந்த நபர் குத்துகிறார். தடுக்க வந்தவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டுகிறார். அந்த பெண்ணை பல முறை குத்தி கொலை செய்துவிட்டு சாவகாசமாக அங்கிருந்து செல்கிறார்.
நிலைத் தகவலில், “டெல்லியில் ஹிந்து பெண்கள் நிலமை 10-04-2021 பட்டபகலில் :- இஸ்லாமிய இளைஞனின் லவ்ஜிஹாத் கொடூரம்…😡 கெஜிர்வால் ஆட்சி எப்படி உள்ளது என்று பாருங்கள் டெல்லியில் நடுரோட்டில் ஒரு நாய் ஒரு பெண்ணை மிருகத்தை விட கேவலமாக குத்தி கொண்டு இருப்பதை… வேடிக்கை பார்த்து செல்லும் காட்டு மிராண்டி கூட்டம் லவ் ஜிகாத்…
இந்த செயல்பாட்டை தடை செய்ய வேண்டும் உடனடியாக… இல்லை என்றால் எத்தனை கொலை இது போன்று நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை… தெரு நாய்களுக்கு காதல் வேறு இந்த நாய்யை பிடித்து நடு ரோட்டில் தூக்கில் தொங்க விட வேண்டும்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை சந்தோஷ் பாரதி என்ற நபர் 2021 ஏப்ரல் 15 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோ நெஞ்சை உறைய வைக்கும் வகையில் உள்ளது. அந்த பெண்ணை காப்பாற்ற ஒரே ஒருவர் முன்வந்த நிலையில் கத்தியைக் காட்டி அந்த நபர் மிரட்ட, அவரும் நகர்கிறார். சாலையில் எதுவும் நடக்காதது போல பலரும் நடந்து செல்வதை காண முடிகிறது. இந்த சம்பவம் டெல்லியில் ஏப்ரல் 10, 2021 அன்று நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடியோவில் கொல்லப்பட்ட பெண் இந்து என்றோ, கொலை செய்தவன் இஸ்லாமியர் என்றோ குறிப்பிடப்படவில்லை. எதன் அடிப்படையில் இவர்கள் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்று தெரியவில்லை. சமூக ஊடகங்களில் பலரும் இதை ஷேர் செய்தும் வருகின்றனர். எனவே, இதன் இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

சமீபத்தில் தான் நடந்தது என்பதால், டெல்லி, கத்திக்குத்து, பெண் கொலை என கீ வார்த்தைகள் அடிப்படையில் கூகுளில் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சியுடன் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது.
தி இந்து வெளியிட்டிருந்த செய்தியில், கணவனே தன் மனைவியை நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்தான். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் நீலு மேதா என்றும் அவர் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார் என்றும், அவரை கொலை செய்த கணவன் பெயர் ஹரிஷ் மேதா என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
நீலு மருத்துவமனையில் பணியாற்றுவது ஹரிஷுக்கு பிடிக்கவில்லை. வேலையை விடும்படி அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த தகராறு காரணமாக கொலை நடந்தது என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive 1 I ndtv.com I Archive 2
இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 26 வயதாகிறது என்றும், அவருக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருக்கிறது என்ற சந்தேகத்தில் அவளை அவரது கணவன் ஹரிஷ் மேத்தா கொலை செய்தான் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இருவரும் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி எட்டு மாதங்கள் தான் ஆகிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: thehindu.com I Archive
தி இந்து வெளியிட்டிருந்த செய்தியில் அதே நாளில் டெல்லியின் வேறு ஒரு பகுதியில் வேறு ஒரு பெண்ணும் குத்தி கொலை செய்யப்பட்டார். அந்த பெண்ணின் பெயர் ஷகீலா. அவரை அவரது வளர்ப்பு மகன் முஸ்தபா கொலை செய்தான் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த இரண்டு கொலைகளையும் தொடர்புபடுத்தி லவ் ஜிகாத் என்று கதை கட்டியிருக்கலாம் என்று தெரிகிறது.
நம்முடைய ஆய்வில், கொலை செய்யப்பட்ட இருவரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள், திருமணம் ஆனவர் என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்து பெண்ணை இஸ்லாமிய இளைஞர் கொலை செய்தார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
டெல்லியில் லவ் ஜிகாத் செய்து இந்து பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:டெல்லியில் லவ் ஜிகாத் காரணமாக இந்து பெண்ணை கொன்ற இஸ்லாமியர் என பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False

வணக்கம், எனக்கு வந்த வாட்சப் செய்தியை அப்படியே பகிந்துவிட்டேன்… அதன் உண்மை தன்மை அறியாமல் பகிந்தாதற்க்காக வருந்துகிறேன்… நான் எழுதிய தகவல் அல்ல… வாட்சப்இல் வந்த செய்தி… தற்சமயம் அந்த செய்தியை அழித்துவிட்டேன்…
உண்மைதன்மையை புரியவைத்த உங்களுக்கு எனது மனபுர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…
நன்றி,
சந்தோஷ் பாரதி
நான் எழுதிய செய்தியல்ல வாட்சப்இல் வந்த செய்தி – செய்தியின் உண்மை தன்மை அறியாமல் பகிர்ந்தமைக்காக வருந்துகிறேன்…
உண்மை செய்தியை கூறியதற்காக நன்றி…