
நிபா வைரஸ் தொற்று பாதித்த வாழைப் பழத்தைச் சாப்பிட்ட குடும்பம் உயிரிழந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
2018ம் ஆண்டு நிபா வைரஸ் உச்சத்திலிருந்தபோது பகிரப்பட்ட பதிவு 2020 டிசம்பர் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. வாழை இலை ஒன்றில் வவ்வால்கள் இருக்கும் படம், கெட்டுப்போன வாழைப் பழங்கள் படம், குடும்பம் ஒன்று இறந்து கிடக்கும் புகைப்படங்கள் கொலாஜ் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளன.
நிலைத் தகவலில், “வாழைப்பழம் சாப்பிடும்போது கவனத்துக்கு… வாவால் மூலம் நிப்போ ண்ட வைரஸ் பரவி வருது. இந்த நோய் ஏற்பட்டால் கண்டிப்பா மரணம்தான் முடிந்த அளவு பார்த்து சாப்பிடுங்க முடியும் வரை ஷேர் பண்ணுங்க” என்று உள்ளது.
இந்த பதிவை Abdul Raheem என்பவர் 2018ம் ஆண்டு பதிவிட்டுள்ளார். 2020 டிசம்பரிலும் இதை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2018ம் ஆண்டு கேரளாவில் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் நிபா என்ற மனிதர்களைப் பாதிக்கும் வைரஸ் பரவியது. அப்போது இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு பதிவிடப்பட்ட பதிவு தற்போதும் கூட வைரலாக பகிரப்பட்டு வருதைக் காண முடிகிறது. எனவே, இந்த தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு செய்தோம்.
இறந்துகிடக்கும் குடும்பத்தைப் பார்க்கும்போது நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் போல இல்லை. நோய்த் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். அனைவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் படத்தைப் பார்க்கும்போது தற்கொலை செய்துகொண்ட குடும்பம் போல இருந்தது.
எனவே, முதலில் இறந்து கிடக்கும் குடும்பத்தின் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது வாழை இலையைக் கழுவாமல் சாப்பிட்டதால் குடும்பமே உயிரிழந்தது. இதற்குக் காரணம் நிபா வைரஸ்தான் என்று கூறி மனிதன் என்ற ஊடகம் 2018ம் ஆண்டு செய்தி வெளியிட்டிருப்பது நமக்குக் கிடைத்தது.
அசல் பதிவைக் காண: manithan.com I Archive
தொடர்ந்து தேடியபோது டெக்கான் ஹெரால்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் 2017ம் ஆண்டு வெளியான செய்தி ஒன்றில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருப்பது நமக்கு தெரியவந்தது.
அதில், கடன் பிரச்னை காரணமாக தெலங்கானா மாநிலம் சூர்யபேட் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மாமிலகட்டா என்ற பகுதியில் குடும்பத்தின் ஆறு பேர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டு இருந்தது. அதாவது, நிபா வைரஸ் பரவுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த செய்தி வெளியாகி இருந்தது. இதன் மூலம் இவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டதால் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் இல்லை என்பது உறுதியானது.
அசல் பதிவைக் காண: deccanherald.com I Archive
அடுத்ததாக வவ்வால்கள் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் நிபா வைரஸ் கிருமியை பரப்பும் வவ்வால்கள் என்று எங்கும் கூறப்படவில்லை. இந்த புகைப்படம் pinterest.com உள்ளிட்ட இணையதளங்களில் பலரும் பகிர்ந்து வந்திருப்பதை காண முடிகிறது.
நிபா வைரஸ் பற்றி தெரிந்துகொள்ள தேடினோம். இது பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. 1998ம் ஆண்டு முதன் முதலில் மலேசியாவில் இந்த வைரஸ் பரவியது. 2018ம் ஆண்டு கேரளாவில் இந்த வைரஸ் பரவியபோது 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த தொற்று ஏற்பட்டவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி, தொண்டை வலி ஆகியவை ஏற்படலாம். மேலும் மயக்கம், நரம்பு பிரச்னைகளும் ஏற்படலாம் என்று பிபிசி வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதாவது இந்த தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். தீவிர சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தவிர்க்கலாம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கூறியிருப்பது போல, இரவில் பழம் சாப்பிட்டு படுத்தால், காலையில் உயிரிழப்பு எல்லாம் சாத்தியமில்லை, என்பது உறுதியாகிறது.
நம்முடைய ஆய்வில், இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு தெலங்கானாவில் தற்கொலை செய்துகொண்ட குடும்பம் ஒன்றின் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
தெலங்கானவில் தற்கொலை செய்துகொண்டு இறந்த குடும்பத்தின் படத்தை நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்தவர்கள் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நிபா வைரஸ் பாதித்த வாழைப் பழத்தைச் சாப்பிட்ட குடும்பம் உயிரிழப்பு என பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
