FACT CHECK: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் குழந்தை பருவ படமா இது?–சொந்த கட்சிக்காரர்களே பரப்பும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் குழந்தைப் பருவ படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தாயுடன் குழந்தை இருக்கும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தங்க நாற்கர சாலை தந்த தலைமகனுக்கு பிறந்த நாள் இன்று” என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை மோடி ராஜ்யம் Modi Rajyam என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Shri Ram என்பவர் 2020 டிசம்பர் 25ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அடல் பிகாரி வாஜ்பாயின் குழந்தைப் பருவ படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.  குழந்தையைப் பார்க்க உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றியது. இருப்பினும் இது உண்மையா என்று அறிய அடல் பிகாரி வாஜ்பாயின் குழந்தை பருவ படத்தை தேடினோம். தந்தையுடன் இருக்கும் ஒரு படம் மற்றும் குடும்ப புகைப்படம் ஒன்றை ஊடகங்களில் வெளியிட்டு வந்துள்ளன. ஆனால், குழந்தையை அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை யாரும் வெளியிடவில்லை.

தொடர்ந்து தேடியபோது வாஜ்பாயின் குழந்தைப் பருவ படம் என்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஒருவரின் படம் பகிரப்பட்டு வருகிறது என்று thelallantop.com என்ற ஊடகம் 2018 டிசம்பர் 25 அன்று வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது.

அசல் பதிவைக் காண: thelallantop.com I Archive

இந்தியில் இருந்ததை மொழிமாற்றம் செய்து படித்துப் பார்த்தோம். அந்த சமூக சேகரிடம் அவர்கள் பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தனர். “என் பெயர் சர்வத் சங்கர். நான் 1976ம் ஆண்டு பிறந்தேன். என் அன்னையுடன் இருக்கும் இந்த புகைப்படம் 1977ல் எடுக்கப்பட்டது. என் தாயாரின் பெயர் நீலம் சங்கர். அவர் 1980ம் ஆண்டு இறந்துவிட்டார். அன்னையர் தினத்தையொட்டி இந்த புகைப்படத்தை என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். 

வாஜ்பாய் இறந்த பிறகு இது வாஜ்பாயும் அவரது தாயாரும் என்று கூறி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி அப்போதே என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். ஆனாலும், தொடர்ந்து வைரலாக பகிரப்பட்டுள்ளது” என்று கூறிய அவர் தன் தாயுடன் இருக்கும் அசல் புகைப்படத்தையும், கைக்குழந்தையாக இருக்கும்போது எடுத்த படத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளார். 

இதன் அடிப்படையில் சர்வத் சங்கரின் ஃபேஸ்புக் பக்கத்தைத் தேடினோம். அப்போது தன்னுடைய தாயாருடன் இருக்கும் படம் என்று அவர் விளக்கம் அளித்து பல பதிவுகள் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஒரு பதிவில் மறைந்த அன்னை நீலம் சங்கரின் அரவணைப்பில் ராணு நீலம் சங்கர் (1977-78) என்று குறிப்பிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2

நம்முடைய ஆய்வில், வாஜ்பாயின் இளமைக் கால படம் என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படம் எந்த ஒரு நம்பத்தகுந்த ஊடகங்களிலோ, பா.ஜ.க அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலோ பகிரப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த படம் தொடர்பாக 2018ம் ஆண்டில் வெளியான விளக்கம் நமக்கு கிடைத்துள்ளது.

படத்தில் குழந்தையாக இருப்பது நான்தான், அது 1977ல் எடுக்கப்பட்டது என்று பீகார் மாநில சமூக சேவகர் கூறியிருப்பதும், அசல் படத்தை அவர் வெளியிட்டிருப்பதும் நமக்கு கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், அடல் பிகாரி வாஜ்பாயின் குழந்தைப் பருவ படம் என்று பகிரப்படும் படம் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அடல் பிகாரி வாஜ்பாயின் குழந்தைப் பருவ படம் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் படம் பீகார் மாநில சமூக சேவகர் ஒருவரின் படம் என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் குழந்தை பருவ படமா இது?–சொந்த கட்சிக்காரர்களே பரப்பும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False