
பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு இரங்கல் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படம் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
முதியவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த முதியவரின் காலில் சங்கிலியால் கட்டப்பட்டு படுக்கையின் இரும்புக் கம்பியில் இணைக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எவ்வளவு மோசமான கொடிய அரக்கனோட ஆட்சியில வாழ்ந்துட்டு இருக்கோம் னு இதை விட வேற என்ன காட்சி வேண்டும்..
84 வயது மறைந்த சமூக செயற் பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு ஆழ்ந்த இரங்கல்.!!😭” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Vijhai Shekar என்பவர் 2021 ஜூலை 5ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து வந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்டானிஸ்லாஸ் லூர்துசுவாமியை கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து மும்பை சிறையில் அடைத்தனர். வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்கின்சன்ஸ் உள்ளிட்ட நோய்கள் மற்றும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட பாதிரியார் சிகிச்சைக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு செய்திருந்தார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பாதிரியார் ஸ்டேன் சுவாமி என்று நேரடியாக குறிப்பிடாமல் காலில் சங்கிலியால் கட்டப்பட்ட நோயாளி ஒருவரின் புகைப்படத்தை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதைப் பார்க்கும் போது படத்தில் இருப்பவர்தான் பாதிரியார் ஸ்டேன் சுவாமி என்று கருதும் வகையில் அந்த பதிவுகள் அமைந்துள்ளன. எனவே, அந்த படத்தில் உள்ள நபர் பாதிரியார் ஸ்டேன் சுவாமியா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 I Facebook 3 I Archive 3
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது அந்த நபர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி இல்லை என்பது தெரியவந்தது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த மே மாதம் பாபுராம் சிங் என்ற சிறைக் கைதி கோவிட் தொற்று காரணமாக சுவாசத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாபுராம் பல்வான் சிங் என்ற 92 வயது (சில ஊடகங்களில் 84 வயது என்று குறிப்பிட்டுள்ளனர்) முதியவர் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஏட்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மூச்சுத் திணறல் காரணமாக ஏட்டா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரது உடல் நிலை மோசமடையவே அலிகார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு மருத்துவமனையில் இடம் இல்லாததால் மீண்டும் ஏட்டா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அசல் பதிவைக் காண: timesofindia I Archive 1 I ndtv.com I Archive 2
அவரது கால் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து சிறை வார்டன் அசோக் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று செய்திகள் கிடைத்தன.
இதன் மூலம் படுக்கையில் சங்கிலியால் கட்டப்பட்ட முதியவர் பாதிரியர் ஸ்டேன் சுவாமி இல்லை என்பது உறுதியாகிறது. ஸ்டேன் சுவாமி என்று குறிப்பிட்டு பகிரப்படும் பதிவுகள் தவறானது என்பது உறுதியாகிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் “எவ்வளவு மோசமான கொடிய அரக்கனோட ஆட்சியில வாழ்ந்துட்டு இருக்கோம் னு இதை விட வேற என்ன காட்சி வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர். யாரைக் குறிப்பிடுகிறார்கள் என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு ஜாமீன் கிடைக்காத சூழலில் அவரை கைது செய்த மத்திய அரசுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாதிரியார் ஸ்டேன் சுவாமி மும்பையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ளவரோ உத்தரப்பிரதேசம் ஏட்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். படத்தில் இருப்பது ஸ்டேன் சுவாமி என்று குறிப்பிட்டிருந்தால் அல்லது படத்தில் இருப்பது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறை தண்டனை கைது என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பம் வந்திருக்காது.
முடிவு:
மறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் படம் என்று பகிரப்படும் புகைப்படம் உ.பி-யைச் சேர்ந்த சிறைக் கைதி ஒருவருடையது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மருத்துவமனையில் இருந்த படமா இது?
Fact Check By: Chendur PandianResult: Missing Context
