
டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு நடுவே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய, அவர்களுக்கு பின்னர் பஞ்சாப் சீக்கியர்கள் அமைதியாக நின்று பார்க்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “நெனச்சன்டா ! தில்லி விவசாயி போராட்டதுல இப்படி ஒரு போட்டோ வரும்னு ! அமைதி மார்க்க ஸ்கெட்ச் நாட்டுக்கு எதிரான எல்லா போராட்டதுலயும் ஒரே மாதிரி இருக்கு.
1. பிரியாணி கொடுக்குற போட்டோ வரும்
2. போராட்டத்துல கலந்துக்குற போட்டோ வரும்
3. இவங்க தொழுகை பண்ண மத்தவங்க சுத்தி நிக்கிற போட்டோ வரும்
4. ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டதா போட்டோ வரும்
5. போராட்டத்துல உடம்பு சரியில்லாதவர்க்கு ரத்தம் கொடுத்ததா போட்டோ வரும்
6. பெண்களை பாதுகாத்ததா(😂) போட்டோ வரும். மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டுகுங்க … த்தூ… ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Senthil Pandi என்பவர் 2020 டிசம்பர் 7ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த பதிவை Senthil Pandi மட்டுமல்ல… அவரைப் போல ஏராளமானவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு இஸ்லாமியர்கள் பின்னணியாக இருப்பதாகவும், இஸ்லாமியர்கள்தான் பஞ்சாப் சிங்குகள் போல வேடமிட்டு போராட்டத்தில் பங்கேற்று வருவதாகவும் விதவிதமாக வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த புகைப்படம் விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2020 மே மாதம் வெளியான பல செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
பஞ்சாப் மாநிலம் மெலேர்கோட்லா என்ற இடத்தில் உள்ள குருத்வாராவில் கொரோனா ஊரடங்கு காரணமாக இஸ்லாமியர்கள் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்தை Tribune என்ற ஊடகம் எடுத்ததாக உரிமை கோரியுள்ளது.
அசல் பதிவைக் காண: tribuneindia.com I Archive
சீக்கியர்களின் குருத்வாராவில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் கடைசி இரவு நோன்பு திறப்பு தொழுகை நடத்தினர். அவர்களுக்கு சீக்கியர்கள் விருந்து அளித்தனர் என்று சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் 2020 மே 25ம் தேதி வெளியாகி இருந்தது.
விவசாயிகள் சட்டம் 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். வேளாண் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து விவசாயிகள் போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
நம்முடைய ஆய்வில், இந்த புகைப்படம் 2020 ரம்ஜான் பண்டிகையின் போது பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் “விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகின்றனர். இதன் மூலம் சீக்கியர்களின் போராட்டத்தை இஸ்லாமியர்கள்தான் பின்னணியில் இருந்து இயக்குகின்றனர்” என பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று பகிரப்படும் படம் 2020 ரம்ஜான் பண்டிகையின் போது எடுக்கப்பட்டது என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:விவசாயிகள் போராட்டத்திற்கு நடுவே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதாக பரவும் பழைய படம்!
Fact Check By: Chendur PandianResult: False
