FACT CHECK: ராகுல் காந்தியை தாக்கிய போலீசாருக்கு ஆசி வழங்கினாரா யோகி ஆதித்யநாத்?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

ராகுல் காந்தியை தாக்கிய போலீசாருக்கு யோகி ஆதித்ய நாத் ஆசீர்வாதம் வழங்கியதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ராகுல் காந்தி தாக்கப்படும் படம் மற்றும் காவலர் ஒருவருக்கு யோகி ஆதித்யநாத் ஆசி வழங்கும் படம் இணைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “ராகுல் காந்தியைத் தாக்கிய காவலருக்கு ஆசீர்வாதம் உருப்படும் நாடு” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட பதிவை N Vengatesh Cpi M என்பவர் 2020 அக்டோபர் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படும் இளம் பெண் வீட்டுக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல் காந்தியை போலீசார் மிகக் கடுமையாக நடத்தியதாக படங்கள், வீடியோக்கள் வெளியாகின. 

இந்த நிலையில் ராகுல் காந்தியைத் தாக்கிய போலீசாருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆசி வழங்கினார் என்று பதிவு பகிரப்பட்டு வருகிறது. 

ஹாத்ராஸ் மாவட்ட போலீஸ் எஸ்.பி, துணை கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டர் என அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராகுல் காந்தியைத் தாக்கினார்கள் என்பதற்காக அவர் ஆசி வழங்கியிருப்பாரா என்ற, அதுவும் பிரச்னை தீவிரமாக உள்ள நிலையில் அவர் ஆசி வழங்கியிருக்க முடியுமா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக டிஎன்ஏ என்ற ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில், கோரக்பூரில் உள்ள மடத்தில் குரு பூர்ணிமா அன்று மடத்தின் தலைமை குருவான யோகி ஆதித்யநாத் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். அப்போது டி.எஸ்.பி பிரவீன் சிங் ஆசி பெற்றார் எனக் கூறப்பட்டு இருந்தது. 

deccanherald.com I Archive 1

dnaindia.com I Archived 2

காவல் துறை அதிகாரி, சீருடை அணிந்திருக்கும் போது இப்படி செய்யலாமா என்று 2018ம் ஆண்டு சர்ச்சை கிளம்பியதும், அதற்கு உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்ததும் செய்தியாக வெளியாகி இருந்தது. டி.என்.ஏ மட்டுமின்றி இந்தியா டுடே உள்ளிட்ட பல ஊடகங்களிலும் இந்த புகைப்படம் 2018ம் ஆண்டு வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.

ராகுல் காந்தி ஹாத்ராஸ் செல்ல முயன்று தடுத்து நிறுத்தப்பட்டது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது, பின்னர் அவர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் அக்டோபர் 1, 2020 அன்று நடந்தது. 

dinakaran.com I Archive

இதன் அடிப்படையில் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது நடந்த நிகழ்வுடன் தொடர்புபடுத்தி விஷமத்தனமாக பதிவு வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், இது 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ராகுல் காந்தியை தாக்கிய போலீசாருக்கு ஆசி வழங்கினாரா யோகி ஆதித்யநாத்?

Fact Check By: Chendur Pandian 

Result: False