காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி என உலக வங்கியிடம் தி.மு.க அரசு அறிக்கை கொடுத்ததா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் வழங்கிய காபி, மிக்சருக்கு ரூ.47 கோடி செலவு ஆனது என தி.மு.க அரசு அறிக்கை அளித்தது என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் தினகரன் நாளிதழில் வெளிவந்த செய்தி புகைப்படத்தை இணைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. தினகரன் நாளிதழில், “நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜூன் 12ம் தேதி செய்தி வெளியானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த ஆண்டு என்று இல்லை. இதனுடன், “அதாவது Project Value ரூ.3000 கோடி ஆனா டீ காபி மிக்சர் திங்க ரூ.47 கோடி சேர்த்து கேட்டிருக்கானுங்க.! World Bankகே ஆடி போயிருக்கான் யார்டா நீங்கன்னு! மிரட்டிய திராவிட மாடல், மிரண்ட உலக வங்கி” என்று போட்டோஷாப் முறையில் டைப் செய்யப்பட்டிருந்தது. இந்த பதிவை எல்லார் செழியன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் படம் வைத்து, மிரட்டிய திராவிட மாடல் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த அறிக்கை தற்போது வெளியானது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் தினகரன் வெளியிட்டிருந்த செய்தியில் வருடம் இடம்பெறவில்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

“நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி” என்ற தலைப்பைக் கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது தினகரன் வெளியிட்ட செய்தி நமக்குக் கிடைத்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செய்தி இருந்தது. இந்த செய்தி 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி பதிவிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 2017ம் ஆண்டு வெளியான செய்தியை 2022ல் வெளியிட்டிருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: dinakaran.com I Archive

தொடர்ந்து தேடிய போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செய்தி படத்தை 2018ம் ஆண்டு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது தெரிந்தது. இதன் மூலம் தி.மு.க ஆட்சியில் காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி என அறிக்கை வெளியாகவில்லை என்பது உறுதியானது.

Archive

2017ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின் போது வெளியான அறிக்கையை எடுத்து வந்து, 2022ல் தி.மு.க ஆட்சியில் காபி, மிக்சர் சாப்பிட ரூ.47 கோடி செலவாகும் என ஸ்டாலின் அரசு கூறியது என்று விஷமத்தனமான தகவலைச் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையுடன் தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சருக்கு ரூ. ரூ.47 கோடி செலவானது என தி.மு.க அரசு அறிக்கை அளித்ததாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி என உலக வங்கியிடம் தி.மு.க அரசு அறிக்கை கொடுத்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False