
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீட் விலக்கு வழங்கக் கோரி மசோதா நிறைவேற்றப்பட்ட சூழலில், நீட் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று வழக்கறிஞர் நளினி சிதம்பரம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்ட வழக்கறிஞர் நளினி சிதம்பரம் பேட்டியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “நீட் விவகாரத்தில் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். கிராமப்புற மாணவர்களுக்காக நீட் தேர்வில் இருந்து விலக்கு எனக் கூறுவது ஏமாற்று வேலை – வழக்கறிஞர் நளினி” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “விடியல்_அரசின்_நாடகம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Gokul Raj M என்பவர் 2021 செப்டம்பர் 13ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021 செப்டம்பர் 13ம் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் முயற்சி வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்திருந்தார்.
இந்த சூழலில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் துணைவியாருமான நளினி சிதம்பரம் அறிவித்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. புதிதாக அவர் கூறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஸ்கிரீன்ஷாட்களில் “தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து” என்று இருந்தது. தமிழ்நாடு அரசு அவசர சட்டம் எதையும் கொண்டு வரவில்லை. நீட் விலக்கு மசோதாவைத்தான் கொண்டு வந்துள்ளது. எனவே, இது இப்போது அளித்த பேட்டி இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
தந்தி டி.வி-யின் யூடியூப் பக்கத்தில் நளினி சிதம்பரம் அளித்த பேட்டியைத் தேடி எடுத்தோம். 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி அந்த வீடியோவை தந்தி டிவி பதிவேற்றம் செய்திருந்தது. மேலும் 2017ல் நளினி சிதம்பரம் அளித்த பேட்டி முன்னணி ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது.
அசல் பதிவைக் காண: dinamani.com I Archive
2017ம் ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு அவசர சட்டம் நிறைவேற்றி வழங்கினால் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவசர சட்ட வரைவு தயாரித்து ஒப்புதல் பெற மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறி அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து, நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உண்மை இப்படி இருக்க, 2017ல் வெளியான நளினி சிதம்பரத்தின் பேட்டியை இப்போது அளித்தது போன்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி இருவரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள். அதற்காக ப.சிதம்பரத்தின் மனைவி காங்கிரஸ் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று கூற முடியாது. வழக்கறிஞராக செயல்படுவது அவரது விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. அவர் ஆஜராகவில்லை என்றால், வேறு ஒரு வழக்கறிஞர் ஆஜராவார். இதற்கும் தி.மு.க-வின் நாடகம் என்பது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை.
நம்முடைய ஆய்வில், 2017ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நீட் அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று நளினி சிதம்பரம் கூறியதை, 2021ம் ஆண்டு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக பேட்டி அளித்தது போன்று பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவுகளில் நளினி சிதம்பரத்தின் இந்த பேட்டி 2017ம் ஆண்டு வெளியானது என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த ஃபேஸ்புக் பதிவு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நீட் தேர்வு விலக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வேன் என்று நளினி சிதம்பரம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் இப்போது வெளியானது இல்லை. 2017ம் ஆண்டில் அளித்த பேட்டி என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நீட் விவகாரம்… 2017ல் நளினி சிதம்பரம் பேசியதை தற்போது பகிர்வதால் குழப்பம்!
Fact Check By: Chendur PandianResult: Missing Context
