
இந்தியன் ஆயில் நிறுவனத்தை அதானி நிறுவனம் வாங்கி இந்தியன் ஆயில் அதானி கேஸ் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2
இந்தியன் ஆயில் – அதானி கேஸ் என்று பெயர் பலகை உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேற்று அதானி விமான நிலையம், இன்று இந்தியன் ஆயில்-அதானி கேஸ், மோடி ஜி …… நாளை இந்தியா பேரையும் மாத்தபோறீங்க அதுக்குத்தானே இந்த ஒத்திகை ?” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவை Manikandan Ayyappan என்பவர் 2021 பிப்ரவரி 16ம் தேதி வெளியிட்டுள்ளார். மோடியின் சாதனை என்று பலரும் இதே போன்ற பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விமான நிலையங்களை அதானி நிறுவனம் குத்தகைக்கு எடுத்து வருவது தெரிந்ததுதான். இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை அதானி வாங்கிவிட்டது போலவும், இந்தியன் ஆயில் பெயருடன் அதானி பெயரும் சேர்த்து பெயர் மாற்றம் செய்துவிட்டது போலவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். பொதுத் துறை நிறுவனங்களை விற்கப் போவதாக மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். அதற்குள்ளாக விற்பனை முடிந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
இந்தியன் ஆயில் அதானி கேஸ் என்று உண்மையில் நிறுவனம் ஏதும் உள்ளதா என்று தேடினோம். அப்போது அப்படி ஒரு நிறுவனம் இருப்பது தெரிந்தது. அந்த நிறுவனத்தின் இணையதளத்துக்குச் சென்று நிறுவனம் பற்றிய குறிப்பைப் படித்துப் பார்த்தோம். இந்தியன் ஆயில் அதானி கேஸ் பிரைவேட் லிமிடெட் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டும் அதானி கேஸ் லிமிடெடும் இணைந்து தொடங்கிய நிறுவனம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்தியன் ஆயில் நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கவில்லை என்பதும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து புதிதாக நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தொழில் செய்து வருவதும் தெரிந்தது.

இணையதளத்தைக் காண: ioagpl.com I Archive
இந்தியன் ஆயில் இப்படி வேறு நிறுவனங்களுடன் இணைந்து தொழில் செய்கிறதா என்று பார்த்தோம். அப்போது அதானி நிறுவனம் உள்பட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பெட்ரோலியம் தொடர்பாக பல்வேறு தொழில்களை செய்து வருவது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: iocl.com I Archive
அதானி கேஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் நமக்கு பல அறிக்கைகள் கிடைத்தன. ஒன்றில், இந்தியன் ஆயில் அதானி கேஸ் நிறுவனத்தில் இந்தியன் ஆயிலுக்கு 50 சதவிகித பங்குகள் உள்ளன. மீதி 50 சதவிகித பங்குகள் அதானி கேஸ் நிறுவனத்துக்கு உள்ளது. இந்த அதானி கேஸ் என்பது அதானி மற்றும் டோட்டல் நிறுவனங்கள் கையில் தலா 37.4 சதவிகித பங்குகளும், பொது மக்களிடமிருந்து 25.2 சதவிகித பங்குகளும் பெறப்பட்டு தொடங்கப்பட்ட நிறுவனம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: adanigas.com I Archive
அடுத்ததாக இந்தியன் ஆயில் அதானி கேஸ் நிறுவனம் 2014 மே மாதத்துக்குப் பிறகு தொடங்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். அப்போது அதானி கேஸ் நிறுவனத்தின் நிதி அறிக்கை நமக்கு கிடைத்தது. அதன் 14வது பக்கத்தில், இந்த நிறுவனம் 2013ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: adanigas.com I Archive
இந்திய அரசின் ஊடகப் பிரிவான பிஐபி சென்னை இந்த தகவல் தவறானது என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதும் நமக்கு கிடைத்தது. அதில் “இந்தியன் ஆயில்-அதானி கேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்பது, இந்தியன் ஆயில்-அதானி கேஸ் நிறுவனங்கள் இணைந்த கூட்டு நிறுவனமாகும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதன் மூலம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெயரையே மாற்றிவிட்டதாக, அந்த நிறுவனத்தையே அதானி வாக்கிவிட்டது போல சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெயரை மாற்றிவிட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இந்தியன் ஆயிலை அதானி குழுமம் வாங்கியதாக பரவும் தவறான தகவல்!
Fact Check By: Chendur PandianResult: False
