
“எஸ்.டி.பி.ஐ-யை தடை செய்ய முடிவெடுத்தால் உடனே தடை செய்துவிடுவேன், யாருடைய கருத்தையும் கேட்கமாட்டேன்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
அமித்ஷா படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “SDPI யை தடை செய்ய முடிவெடுத்துவிட்டால் உடனே தடை செய்துவிடுவேன். மற்றவரின் கருத்தைக் கேட்க நான் காங் மந்திரி இல்லை. – உள்துறை அமைச்சர் அமித்ஷா” என்று குறிப்பிடப்பட்டள்ளது.
நிலைத் தகவலில், “எஸ்டிபியை பார்த்து இந்த *** ஏன் இப்படி வாலை சுருட்டி, சொருகிக்கிட்டு பயப்படாததுபோல நடிக்குது” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Mohamadrafi Devaraj என்பவர் 2020 ஜனவரி 6ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புதிய தலைமுறை இந்த நியூஸ் கார்டை ஜனவரி 3ம் தேதி வெளியிட்டது போல அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் ஃபாண்ட் மட்டும் வித்தியாசமாக இருந்தது. எனவே, ஜனவரி 3ம் தேதி புதிய தலைமுறையில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது, அமித்ஷா படத்துடன் கூடிய நியூஸ் கார்டை அவர்கள் வெளியிட்டிருந்தது தெரிந்தது.

அந்த நியூஸ் கார்டில், “எதிர்க்கட்சிகள் ஓரணியில் வந்தாலும் குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஒரு அங்குலம் கூட பின் வாங்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகள் தாங்கள் விரும்பும் அளவுக்கு தவறான தகவல்களை பரப்பலாம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்” என்று இருந்தது.
Archived Link |
எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்பாக ஜனவரி 3ம் தேதி வேறு எந்த ஒரு நியூஸ் கார்டையும் புதிய தலைமுறை வெளியிடவில்லை. இதை உறுதி செய்ய புதிய தலைமுறை ஆன்லைன் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், இந்த நியூஸ் கார்டு போலியானதுதான் என்று உறுதி செய்தார்.

எஸ்.டி.பி.ஐ கட்சியைத் தடை செய்வது பற்றி அமித்ஷா கருத்து ஏதும் தெரிவித்துள்ளாரா, அதன் அடிப்படையில் புதிய தலைமுறை நியூஸ் கார்டை வைத்து பதிவை உருவாக்கியுள்ளார்களா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
Search Link |
இதன் அடிப்படையில், எஸ்.டி.பி.ஐ கட்சியைத் தடை செய்வது பற்றி அமித்ஷா கருத்து கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:எஸ்டிபிஐ-யை தடை செய்வேன் என்று அமித்ஷா கூறியதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
