
உ.பி-யில் கடவுள் சிலைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்ய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதன் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
சாமி சிலைகளுக்கு ஸ்டெதாஸ்கோப் வைத்து பரிசோதனை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடவுள்களுக்கும் கரோனா உள்ளதா? மருத்துவர்கள் நேரில் சோதனை. சாமிகளுக்கு கரோனா தொற்று உள்ளதா என்று சாமியார் முதல்வரின் உத்தரவின் பேரில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜகன்னநாத் என்ற கோவிலில் இருக்கும் சிலைகளை சோதனை செய்யும் மருத்துவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Viral Video என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 19 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேசத்தில் பசுக்களுக்கு மாஸ் போட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாக செய்திகள் பரவின. ஆனால், அது வதந்தி என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
தற்போது சாமி சிலைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கண்டறிய யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாகவும், அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்றும் படம் பகிரப்பட்டுள்ளது. நாடு முழுக்க கொரோனா பீதி உள்ள நிலையில் அது போன்ற எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட்டதாக தெரியவில்லை. ராமநவமி பேரணியை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். அதுதொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இந்த படம் 2018ம் ஆண்டு ஒரு இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது.

Search Link | livehindustan.com | Archived Link |
இந்தியிலிருந்த அந்த செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், ஒவ்வொரு ஆண்டும் ஜெகன்னாதருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் நிகழ்வு கொண்டாடப்படுவதாகவும், மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டு உடல் நிலை சரியில்லை என்று சொல்வார்.
அதைத் தொடர்ந்து துளசி, சுக்கு, மிளகு, கிராம்பு என மூலிகைகள் கொண்டு மருந்து தயாரிக்கப்பட்டு அவருக்கு படைக்கப்படும் என்றும் பின்னர் அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்றும். ஜெகன்னாதருக்கு உடல்நிலை சரியில்லாத போது கோவில் பூட்டப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக பல வீடியோக்களும் 2018ம் ஆண்டு வெளியானது தெரிந்தது.
இதன் அடிப்படையில் கூகுளில் தேடியபோது ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில் குறிப்பிட்ட அந்த கோவில் மருத்துவர் பரிசோதனை நிகழ்ச்சியின்போது 15 நாட்களுக்குப் பூட்டப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

hindustantimes.com | Archived Link |
நம்முடைய ஆய்வில்,
கொரோனா வைரஸ் காரமாக சாமி சிலைக்கு நோய் பாதிப்பு உள்ளதா என்று யோகி ஆதித்திய நாத் உத்தரவிட்டதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
இந்த புகைப்படம் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
ஒவ்வொரு வருடமும் ஜெகன்னாதருக்கு உடல்நிலை சரியில்லாத நிகழ்வை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், உ.பி-யில் சாமி சிலைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதிக்கும்படி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாகவும் அதன் அடிப்படையில் பரிசோதனை நடத்தது என்றும் பகிரப்படும் படம் மற்றும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:உ.பி-யில் சாமி சிலைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
