
ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியதால் கோவை – ஊட்டி சாலையில் மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஓய்வெடுத்தது என்று ஒரு புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
சாலையில் மான்கள் ஓய்வெடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#கோவையில் மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் #மகிழ்ச்சியாக இருக்கும் #மான்கள்..😍 கோவை டூ #ஊட்டி மெயின் ரோடு🖤🖤🖤🖤” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Tamil Cinema Express என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 22ம் தேதி வெளியிட்டுள்ளது. ஏராளமானோர் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
இந்த சாலையைப் பார்க்கும்போது நம் ஊர் போல இல்லை. இருப்பினும் ஊட்டி சாலை என்று குறிப்பிட்டதால் வனப்பகுதியில் எங்காவது அப்படி இருக்கலாம் என்று நினைத்து பலரும் ஷேர் செய்து வருகின்றனர். சாலையில் சிறுவன் ஒருவன் சைக்கிளில் நின்று கொண்டிருப்பதையும் ஒருவர் நடந்து செல்வதையும் காண முடிகிறது. அவர்களைப் பார்க்கும்போது வெளிநாட்டினர் போல தெரிகிறது. எனவே, இந்த படம் உண்மையில் ஊட்டி சாலையில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இந்த புகைப்படம் பல ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. அதில், ஜப்பானின் நாரா நகரத்தில் மான்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். 2017ம் ஆண்டு முதல் இந்த படம் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.
Archived Link 1 | Facebook Link | Archived Link 2 |
இதன் அடிப்படையில், 2017ம் ஆண்டு ஜப்பானில் எடுக்கப்பட்ட படத்தை வெளியிட்டு கோவை – ஊட்டி சாலையில் மான்கள் என்று தவறான தகவல் பகிர்ந்து வருவது தெரிந்தது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கோவை ஊட்டி சாலையில் மான்கள்!- வைரல் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
