
2004ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரழிவில் பெற்றோரை இழந்த பெண் ஒருவர் தமிழக போலீஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
சிறுமி மற்றும் காவல் துறை பெண் அதிகாரி ஒருவரின் படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். வேறு பக்கத்தில் ஷேர் செய்யப்பட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டது போல உள்ளது. அதில், ‘2004ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமியில் அப்பா அம்மாவை இழந்த இந்த குழந்தை தற்போது தமிழக காவல்துறையில் பணியாற்றும் இந்த பெண்ணை வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Troll 420 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 அக்டோபர் 31ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சுனாமியால் பெற்றோரை இழந்த பெண், டீச்சர் ஆனார், டாக்டர் ஆனார், போலீஸ் ஆனார் என்று பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் நிவேதா பெத்துராஜ் படத்தை, சுனாமியால் பெற்றோரை இழந்து தற்போது தமிழக போலீஸில் பணியாற்றும் பெண் என்று பகிர்ந்துள்ளனர்.

உண்மையில் இந்த படங்கள் எப்போது எடுக்கப்பட்டது. படத்தில் உள்ள சிறுமி யார் என்று தேடினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த பதிவு பொய்யானது என்று வெளியான கட்டுரை ஒன்றும், ‘திமிறு பிடிச்சவன்’ படத்தில் நிவேதா பெத்துராஜ் போலீஸ் வேடத்தில் நடித்தது தொடர்பான செய்தி, படங்கள் கிடைத்தன.

Search Link | businessworld.in | Archived Link |
சினிமா ஷூட்டிங் தொடர்பான செய்தியை பார்த்தோம். அதில், விஜய் ஆன்டனியுடன் போலீஸ் வேடத்தில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் என்று குறிப்பிட்டு இருந்தனர். மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் இந்த பட காட்சியிலிருந்து எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

plumeriamovies.com | Archived Link |
படத்தில் இருக்கும் சிறுமி பற்றித் தேடினோம். சிறுமியின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, அது பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி என்பது தெரியவந்தது. பல சமூக ஊடகங்களில் அந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதும் சில புகைப்படங்களை விற்பனை செய்யும் தளங்கள் இந்த படத்தை விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரியவந்தது.

Search Link | dailymail.co.uk | Archived Link 1 |
நம்முடைய ஆய்வில்,
சுனாமியில் பெற்றோரை இழந்த பெண் தமிழக போலீஸ் அதிகாரியாக பணியாற்றுகிறார் என்று சில மாதங்களாக சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி வேடத்தில் இருப்பது நடிகை நிவேதா பெத்துராஜ் என்பதும், திமிறு பிடிச்சவன் படத்தின் காட்சி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
படத்தில் உள்ள சிறுமி பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சுனாமியில் பெற்றோரை இழந்த இந்த குழந்தை தற்போது தமிழக காவல்துறையில் பணியாற்றி வருகிறது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சுனாமியில் பெற்றோரை இழந்த பெண் காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
