
‘’தேவை எனில் மாறன் சகோதரர்களை சிறையிலடைத்து விசாரிக்கலாம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Kadal Bjp என்பவர் ஜூன் 18, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். டிவி.,களில் வரும் பிரேக்கிங் நியூஸ் போன்ற டெம்ப்ளேட் பயன்படுத்தி, ‘’சிறையிலடைக்க உத்தரவு – பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து கூட விசாரிக்கலாம்- உயர்நீதிமன்றம் அதிரடி,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முதலில், மேற்குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் எதுவும் தெளிவாக இல்லை. சிறையிலடைக்க உத்தரவு என தலைப்பில் கூறிவிட்டு, உள்ளே தேவைப்பட்டால் சிறையில் அடைத்து கூட மாறன் சகோதரர்களை விசாரிக்கலாம் ,என்று எழுதியுள்ளனர். அத்துடன், எந்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வெளியிட்டது என்றும் குறிப்பிடவில்லை. இது நமக்கு குழப்பத்தையே அதிகப்படுத்துவதாக உள்ளது.
இதன்படி ஏதேனும் நீதிமன்ற உத்தரவு சமீபத்தில் வெளியாகியுள்ளதா என கூகுளில் தகவல் தேடிப்பார்த்தோம். அப்போது, கடந்த மார்ச் 20, 2019 அன்று மாறன் சகோதரர்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது என்று தகவல் கிடைத்தது.

அதாவது, பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறி, முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு நடத்தி வருகிறது. இந்த குற்றச்சாட்டை ரத்து செய்ய கோரி மாறன் சகோதரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனுவை, மார்ச் 20, 2019 அன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த குற்றச்சாட்டை ரத்து செய்ய முடியாது என்றும், தேவைப்பட்டால் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்துக்கூட சிபிஐ விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளதாக, ஆதாரம் கிடைத்தது.
இதுபற்றி தி இந்து வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதேபோல, தினமணி வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதே செய்தியை, பாலிமர் தொலைக்காட்சி எப்படி வெளியிட்டுள்ளது என்பதை கீழே உள்ள வீடியோ இணைப்பு கிளிக் செய்து பாருங்கள்.
இதன்படி, ‘’சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது, தேவை ஏற்பட்டால் மட்டுமே மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கும்படி சிபிஐ.,க்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது,’’ என்று தெரியவருகிறது.
இந்த செய்தியை உயர்நீதிமன்றம் உத்தரவு என தலைப்பிட்டு, சொல்ல வந்த தகவலை சரியான முறையில் பாலிமர் தொலைக்காட்சி பகிர்ந்துள்ளது.

தேவை ஏற்பட்டால் மட்டுமே அவர்களை சிறையில் அடைத்து சிபிஐ விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில், இதனை சரியாகச் சொல்லாமல் மொட்டையாக, சிறையில் அடைக்க உத்தரவு என்று தகவல் பகிர்ந்துள்ளனர். அத்துடன், மார்ச் 20,2019 அன்று நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை, ஜூன் 18,2019 அன்று பகிர்ந்திருக்கிறார்கள். இப்படி செய்வதன் மூலமாக, வாசகர்களை திசைதிருப்பும் வகையில் செயல்பட்டுள்ளனர்.
சொல்ல வந்த தகவலை சரியாகச் சொல்லாமல், காலம் தாழ்ந்து பதிவிட்ட காரணத்தால், இந்த பதிவு வாசகர்களை குழப்புகிறது. ஆனாலும், இது உண்மையான செய்திதான். இதுபற்றி சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையானதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது முக்கியமான அரசியல் செய்தி என்பதால் பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருவதை உணர முடிகிறது.

Title:மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: True
