
முல்லைப் பெரியாறு அணையை திறந்துவிட போராட்டம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று கேரள நடிகர் மம்மூட்டி பேசியதாகக் கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி சந்தேகம் தெரிவித்து, நமது வாசகர் ஒரு இமெயில் மூலமாக புகார் கூறியிருந்தார். எனவே, இதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

சமுத்திரக்கனி என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 15ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. எந்த தேதியில், எப்போது இவ்வாறு மம்மூட்டி பேசினார் என்ற விவரம் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. யாரோ ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை, அப்படியே நகலெடுத்து இவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். இதனை பலரும் உண்மை என பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் மம்மூட்டி உண்மையில் முல்லை பெரியாறு விவகாரத்தில் இப்படி வெளிப்படையாய் கருத்து கூறியிருந்தாரா என்ற சந்தேகம் எழவே, இணையதளத்தில் இதுபற்றி தரவுகள் எதுவும் கிடைக்கிறதா என தேடிப் பார்த்தோம்.
ஆனால், அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், தான் புதியதாக நடித்து வரும் மாமாங்கம் என்ற படம் பற்றி மம்மூட்டி கருத்து கூறியிருப்பதாக, ஒரு செய்தி மட்டுமே வெளியாகியுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர,2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மம்மூட்டி, தமிழக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, வெளியிட்ட வீடியோ ஒன்றின் விவரமும் கிடைத்தது. ஆனால், அதில், அவர் முல்லைப் பெரியாறு விவகாரம் பற்றி எதுவும் பேசவில்லை.
அத்துடன், முல்லைப் பெரியாறு விவகாரம் பற்றி மம்மூட்டி தொடர்பாக வேறு செய்திகள் எதுவும் உள்ளதா என தேடியபோது, 2011ம் ஆண்டு கேரள சினிமா உலகம் சார்பாக, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றதாக, தெரியவந்தது. ஆனால், அந்த போராட்டத்தில் நடிகர் மம்மூட்டி, மோகன்லால் பங்கேற்கவில்லை. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அதேசமயம், 2011 டிசம்பர் மாதத்தில் நடிகர் மம்மூட்டி, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆனால், அது முல்லை பெரியாறு விவகாரம் பற்றியது எனக் கூறப்பட்டாலும், இதுபற்றி மம்மூட்டி கருத்து கூறவில்லை. இதுதொடர்பாக தினமலர் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அதே டிசம்பர் 2011ல் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு செய்தியில், தனது மகனின் திருமணத்திற்காக, முதல்வர் ஜெயலலிதாவை மம்மூட்டி நேரில் வந்து அழைத்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுபற்றி வெவ்வேறு விதமான கீவேர்ட்களை பயன்படுத்தி மீண்டும் கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது, கடந்த 2012ம் ஆண்டு, விகடன் வார இதழுக்கு மம்மூட்டி அளித்த பேட்டி விவரம் கிடைத்தது. அதில், தமிழர்கள் சேற்றில் கை வைத்தால்தான், நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும், என்று மம்மூட்டி பேசியதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களுக்காக போராடுவேன் என்று கூறியதாகக் குறிப்பிடவில்லை. அச்செய்தியை படிக்க இங்கே1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.
இருந்தபோதிலும், இது 2012ம் ஆண்டில் பேசிய விசயமாகும். தற்போது அல்ல. அதுவும் 2019 ஜூன் 14, 15ம் தேதிகளில் மம்மூட்டி சர்ச்சைக்குரிய வகையில் எதுவும் பேசவில்லை என்பது தெளிவாகிறது.
அத்துடன் இந்த பதிவை வெளியிட்டுள்ள சமுத்திரக்கனி என்ற ஃபேஸ்புக் ஐடி ஒரு ஃபேக் ஐடியாகும். இது உண்மையான சமுத்திரக்கனி என நினைத்து, இந்த ஐடி வெளியிடும் பதிவுகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தை ஆதரித்துப் பேசிய மம்மூட்டி: ஃபேஸ்புக் செய்தியால் பரபரப்பு
Fact Check By: Parthiban SResult: False
