ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத்தான் என்று ஸ்மிருதி இரானி கூறவில்லை!

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான், இதற்கெல்லாம் அரசு பொறுப்பாகாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாக ஒரு வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ஸ்மிருதி இரானி படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான். இதற்கெல்லாம் அரசு பொறுப்பாகாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “இவர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் உங்கள் செருப்பை கலற்றி நீங்களே அடித்துக்கொள்ளுங்கள்…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை முஜிபுர் ரஹ்மான் என்பவர் 2020 ஜூன் 25ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து அதை மையமாக வைத்துப் பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அமைச்சர் ஸ்மிருதி இரானி ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் பற்றி தவறாக கூறியதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இந்த நியூஸ் கார்டில் 2019 பிப்ரவரி 14 எனத் தேதி உள்ளது. இதற்கெல்லாம் என்று குறிப்பிடுவதற்கு பதில் இதற்கேல்லாம் என பிழையோடு உள்ளது. மேலும் இந்த தமிழ் ஃபாண்ட் வழக்கமாக நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தும் ஃபாண்ட் இல்லை.

2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் நடந்த போது ஸ்மிருதி இரானி கூறியதாக வதந்தி பரப்பியிருக்கலாம் என்று தெரிந்தது. இது தொடர்பாக தேடியபோது 2019ம் ஆண்டு பிப்ரவரி முதல் இந்த நியூஸ் கார்டை பலரும் ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது.

Facebook LinkArchived Link

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களை விமர்சித்து கருத்து கூறியதாக போலியாக பதிவு ஷேர் ஆகியுள்ளது. அதற்கு பதிலடியாக ஸ்மிருதி இரானி கூறியது போன்று போலியாக உருவாக்கி பகிர்ந்து வருவதாக சிலர் இரண்டு நியூஸ் கார்டையும் வைத்து பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஸ்டாலின் தொடர்பாக பரவிய நியூஸ் கார்டு தொடர்பான கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

உண்மையில் ஸ்மிருதி இரானி என்ன கூறினார் என்று தேடினோம். அப்போது  பயங்கரவாதிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும், பாகிஸ்தானை விமர்சித்தும் ஸ்மிருதி இரானி பேசிய செய்திகள் நமக்கு கிடைத்தன. ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகத்தை விமர்சித்தது போன்ற எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். 2019 பிப்ரவரி 14ம் தேதி நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு கிடைத்தது. அதில், “விநாயகருக்கு எப்படி தாய், தந்தை உலகமோ, மோடிக்கு பாரதமும் புதிய இந்தியாவும்தான் உலகம்” என்று ஸ்மிருதி இரானி கூறியதாக இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்திருப்பது தெரிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் ஆன்லைன் பிரிவுக்கு அனுப்பி சரிபார்க்க கேட்டோம். அவர்கள் இதை போலியானது என்று உறுதி செய்தனர்.

Archived Link

நம்முடைய ஆய்வில்,

ஸ்மிருதி இரானி ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்தை விமர்சித்து பேசியதாக எந்த பதிவும் கிடைக்கவில்லை.

ஸ்டாலினை விமர்சித்து வதந்தி பரப்பியதைத் தொடர்ந்து பதிலடியாக ஸ்மிருதி இரானியை யை வைத்து வதந்தி பரப்பப்பட்டது தெரியவந்துள்ளது.

ஸ்மிருதி இரானி பேட்டி தொடர்பாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு கிடைத்துள்ளது.

இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நியூஸ் 7 தமிழில் உறுதி செய்துள்ளோம்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான். இதற்கெல்லாம் அரசு பொறுப்பாகாது என்று ஸ்மிருதி இரானி கூறியதாக பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத்தான் என்று ஸ்மிருதி இரானி கூறவில்லை!

Fact Check By: Chendur Pandian 

Result: False