
‘’சீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் நமது நிஜ ஹீரோக்கள்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்திய ராணுவ வீரர்கள் ரயிலுக்காக வரிசையில் காத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’சீன எல்லைக்கு செல்ல காத்திருக்கும் நமது நிஜ ஹீரோக்கள், சல்யூட்,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திய – சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுதொடர்பாக, சமூக ஊடகங்களிலும் நாள்தோறும் புதுப்புது செய்திகள், புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவை பரவுகின்றன.
இந்தியா, சீனா பற்றி பரவும் செய்திகளில் வதந்திகளும் நிறைய உள்ளன. இதுபற்றி நாமும் நிறைய உண்மை கண்டறியும் சோதனைகள் செய்து, முடிவுகளை வெளியிட்டு வருகிறோம்.
இதில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படமும். உண்மையில், இதற்கும், தற்போதைய இந்திய – சீன எல்லை நிலவரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது கடந்த 2017ம் ஆண்டு முதலே இணையதளத்தில் பகிரப்படும் பழைய புகைப்படமாகும்.
எனவே, பழைய புகைப்படத்தை எடுத்து, தற்போதைய நிகழ்வுடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக, நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:சீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்?
Fact Check By: Pankaj IyerResult: False
