
அமெரிக்காவில் அந்நாட்டு அரசு தமிழை இரண்டாவது மொழியாக பாடசாலைகளில் கற்பிக்க அனுமதி வழங்கியுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
வெளிநாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட துணிப்பையை மாட்டியபடி நிற்கிறார்.
நிலைத் தகவலில், “அமெரிக்காவில் அந்நாட்டு அரசு தமிழை இரண்டாம் மொழியாக பாடசாலைகளில் கற்பிக்க அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா அரசுக்கு நன்றிகள். வாழ்க தமிழ், வளர்க தமிழ்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்து மதத்தை பற்றி அறிவோம். என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், Rengaswamy Shankar என்பவர் செப்டம்பர் 16, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்காவில் கட்டாய இரண்டாவது மொழி என்று இல்லை. அங்கு ஆரம்ப பள்ளி என்று கூறப்படும் முதல் ஐந்து கிரேட் வரை அடிப்படை கணிதம், ஆங்கிலம், சமூக படிப்பு, பிசிக்கல் டெவலப்மெண்ட் மற்றும் பைஃன் ஆர்ட்ஸ் சொல்லித் தரப்படுகிறது.

மேல்நிலைக் கல்வி என்று வரும்போது, ஜூனியர் ஹை ஸ்கூல், ஹை ஸ்கூல் என்று பிரிக்கிறார்கள். 12வது கிரேட் வரை இங்கே சொல்லித்தரப்படுகிறது. அதில், அறிவியல், கணிதம், ஆங்கிலம், சமூக அறிவியல் சொல்லித்தரப்படுகிறது. இது மாகாணத்துக்கு மாகாணம், மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுகிறது என்று கூறுகிறார்கள். சில பள்ளிகளில் முதல் உதவி, ஊட்டச்சத்து, பாலியல் விழிப்புணர்வு, மருந்து விழிப்புணர்வு, கலை, வெளிநாட்டு மொழிகள் என்று சொல்லிப்படுகிறது என்று கூறப்படுகிறது. இரண்டாவது மொழி என்று இதைத்தான் கட்டாயம் சொல்லித்தர வேண்டும் என்று எதுவும் இல்லை என்றே தெரிகிறது.
Article Link | Archived Link |
அங்கு, ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலியன், ஜப்பானிய, சீன மொழி அதிக அளவில் படிக்கின்றனர். இது தவிர அமெரிக்கன் சைன் லாங்வேஜ், லத்தின், பண்டைய கிரேக்கம், பைபிள் ஹீப்ரூ என்று 200-க்கும் மேற்பட்ட மொழிகள் கற்றுத் தரப்படுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Article Link | Archived Link |
அங்கு இரண்டாவது மொழியை பலரும் கற்றுக்கொள்ள விரும்புவது இல்லை என்றே பல தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், அங்கு ஆங்கிலம் பிரதான மொழி, அனைவராலும் பேசப்படக்கூடிய மொழியாக உள்ளது. இரண்டாவது மொழியின் தேவை குறைவாகவே உள்ளது என்கின்றனர்.
இந்த நிலையில், தமிழை இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்ற செய்தி சிரிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. இருப்பினும், இது தொடர்பாக செய்தி உள்ளதா என்று தேடினோம். ஆனால், எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2.38 லட்சம் தமிழர்கள் வசிப்பதாக தகவல் தெரிவிக்கிறது. அங்கு தமிழை இரண்டாவது பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று யாராவது கோரிக்கைவிடுப்பார்களா என்று கூட தெரியவில்லை.

தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக கற்பிக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்தால் அது தொடர்பாக இங்கு தமிழின் பெருமை என்று செய்தி வெளியாகி இருக்கும். இங்கு இல்லை என்றாலும் அந்த உத்தரவு பற்றிய அறிவிப்பு அமெரிக்க ஊடகங்களிலாவது வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில் இந்த தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“அமெரிக்காவில் இரண்டாவது மொழியாக தமிழ்” – ஃபேஸ்புக் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
