
‘’ஜாகீர் நாயக் மலேசியா குடியுரிமை பெற்றுவிட்டார்,’’ என ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
Akmal Nazeer Deen என்பவர் இந்த பதிவை கடந்த செப்டம்பர் 15, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், ஜாகீர் நாயக் மலேசியு குடியுரிமை பெற்றுவிட்டதாகக் கூறியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் பிறந்த ஜாகீர் நாயக் , அவரது இஸ்லாமிய அடிப்படைவாத பேச்சிற்காக, கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இந்தியாவில் வசிக்காமல் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் அவர் தற்சமயம் இந்தியா மற்றும் பிரிட்டன் குடியுரிமை மட்டுமே பெற்றுள்ளார்.
ஜாகீர் நாயக் மலேசிய குடியுரிமை பெற முயற்சிப்பதாக செய்திகள் வெளியாவது வழக்கம்தான். இதுபற்றி Economic Times வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுதவிர, இந்தியாவில் பாஜக ஆட்சி செய்வதால் நாடு திரும்ப மாட்டேன், வெளிநாடுகளிலேயே வசிப்பேன் என, ஜாகீர் நாயக் The Week பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதனை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இருந்தாலும், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது உண்மையா என்ற சந்தேகத்தில் அதனை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது ஜாகீர் நாயக் ஃபேன்ஸ் நடத்தும் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் இதுபற்றிய செய்தி வெளியிடப்பட்ட விவரம் கிடைத்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அதாவது, ஜாகீர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிடம் அளித்து மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இதன்பேரில், ஜாகீர் நாயக்கிற்கு மலேசிய அரசு நிரந்தர வசிப்பிடம் எதுவும் அளித்துள்ளதா என தகவல் தேடினோம். அது உண்மைதான். அவருக்கு மலேசிய அரசு நிரந்தர வசிக்கும் உரிமை அளித்துள்ளதால், தற்போது ஜாகீர் நாயக் மலேசியாவில்தான் வசித்து வருகிறார். அந்நாட்டில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதற்கிடையே ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டதாக மலேசியா கூற, அதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மறுப்பு தெரிவித்திருந்த செய்தியும் வெளியாகியுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ஆனால், நாம் ஆய்வு செய்யும் பதிவிலோ, மலேசிய குடியுரிமை ஜாகீர் நாயக் பெற்றுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இது உண்மையல்ல. இதுபற்றி ஏற்கனவே, 2016ம் ஆண்டிலேயே மலேசிய அரசு முறையான விளக்கம் அளித்திருக்கிறது. The Star இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ஜாகீர் நாயக் மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கலாம், ஆனால், அவர் குடியுரிமை பெற வேண்டும் எனில், அவரது பெற்றோரில் ஒருவர் மலேசியராக இருக்க வேண்டும் அல்லது அவரது மனைவி மலேசியராக இருக்க வேண்டும்.
மேலும், ஜாகீர் நாயக் பற்றி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் வேறொரு சம்பவத்தின் தொடர்புடையதாகும். ஆம். அவருக்கு மலேசிய அரசு 2013ம் ஆண்டில் Tokoh Maal Hijrah Award எனும் விருது அளித்தது. அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு, அவருக்கு மலேசிய குடியுரிமை கிடைத்துவிட்டதாக பலரும் வதநதி பரப்புகிறார்கள். இது உண்மையல்ல. இதனை ஜாகீர் நாயக் ஏற்கனவே மறுத்தும் உள்ளார்.
அந்த செய்தியை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ஜாகீர் நாயக், மலேசிய அரசு மற்றும் இந்தியாவிற்கு இடையே உள்ள பிரச்னைகள் பற்றி முழுதாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) ஜாகீர் நாயக் மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றுள்ளார்.
2) ஆனால், அவருக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்படவில்லை.
3) தற்போது அவர் மலேசியாவில்தான் உள்ளார்.
4) 2013ம் ஆண்டு மலேசிய அரசு ஜாகீருக்கு ஒரு விருது வழங்கிய புகைப்படத்தை எடுத்துக் கொண்டு, தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
