
‘’அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது- திண்டுக்கல் சீனிவாசன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அந்த கார்டில், ‘’அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அம்மாவின் கிருபை நிச்சயம் கிடைக்கும்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
அஇஅதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள திண்டுக்கல் சீனிவாசன், அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் ஏதேனும் பேசுவது வழக்கம். இதனால், அவரை பலரும் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல் செய்வது அன்றாடம் நடக்கிறது.
இந்நிலையில்தான், மேற்கண்ட தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் இப்படி திண்டுக்கல் சீனிவாசன் எங்கேனும் பேசியதாகக் கூறி நியூஸ்7 தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டதா என்று தகவல் தேடினோம்.
ஆனால், அப்படி எதுவும் காணக் கிடைக்கவில்லை. இதன்பேரில், நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதா சாரங்கபாணியிடம் விளக்கம் கேட்டோம்.
குறிப்பிட்ட தகவலை பார்வையிட்ட அவர், ‘’இது வழக்கம்போல எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கமாக உள்ளதால், அவர் தொடர்பான நியூஸ் கார்டு எதுவும் சமீப நாட்களாக நாங்கள் வெளியிடுவதில்லை,’’ என தெரிவித்தார்.
எனவே, இது நியூஸ்7 தமிழ் பெயரில் பரவும் போலியான செய்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:திண்டுக்கல் சீனிவாசன் உளறியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
