குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பளாராக போட்டியிடும் திரௌபதி முர்மு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் ஆசி பெற்றதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

திரௌபதி முர்மு மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இருவரும் இணைந்து இந்திய அன்னை ஓவியத்துக்கு வணக்கம் செலுத்தும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், "மூத்த குடிமகளா? திரௌபதி முர்மு ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்று நாக்பூரில் உள்ள மோகன் பகவத்தை அரவது வேட்புமனுவுக்கு ஆசிர்வாதம் பெறச் சென்றார். நாம் எங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறோம் என்பதில் இன்னும் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் இருந்து நாம் வழிநடத்தப்படுகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை சு. செல்வநாயகம் வழக்குரைஞர். என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூலை 6ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பா.ஜ.க கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து ஆசி பெற்றார் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் முர்மு அப்படி நாக்பூர் சென்று ஆசி பெற்றதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகாத சூழலில் இந்த புகைப்படம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. முன்பு எப்போதாவது சந்தித்த படத்தை இப்போது பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

Archive

இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மோகன் பகவத் - முர்மு சந்திப்பு தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், மோகன் பகவத் இந்திய அன்னை ஓவியத்துக்கு மரியாதை செலுத்தும் புகைப்படம் நமக்கு கிடைத்தது. ஆர்.எஸ்.எஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த படம் இருந்தது. ஆனால், அந்த படத்தில் மோகன் பகவத் உடன் முர்மு இல்லை. வேறு ஒரு நபர் இருந்தார். இந்த புகைப்படத்தை எடிட் செய்து பகிர்ந்திருப்பது தெரிந்தது.

Archive

அடுத்ததாக முர்மு புகைப்படத்தை தேடினோம். அந்த படத்தை தனியாக வெட்டி, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றினோம். அந்த புகைப்படம் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ட்விட்டர் பக்கத்தில் நமக்கு கிடைத்தது. ஜார்கண்ட் மாநில முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அப்போது அம்மாநில ஆளுநராக இருந்த திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்ற போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டு புகைப்படங்களையும் எடுத்து, வெட்டி, ஒட்டி, புதிய படமாக உருவாக்கி, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முர்மு, ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் ஆசி பெற்ற காட்சி என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து முர்மு ஆசி பெற்றார் என்று பரவும் தகவல் தவறானது என்றும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்றும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோகன் பகவத்திடம் ஆசி பெற்ற திரௌபதி முர்மு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: Altered