
நிவர் புயல் ஒரே இடத்தில் நிற்காமல் ராமதாஸ் மாதிரி மணிக்கொரு முறை மாறிக்கொண்டே இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “நிவர் புயல் ஒரே இடத்தில் நிற்காமல் ராமதாஸ் மாதிரி மணிக்கொரு முறை மாறிக் கொண்டே இருக்கிறது – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு” என்று உள்ளது.
இந்த பதிவை எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 நவம்பர் 25 அன்று பகிர்ந்துள்ளது.

இதே பதிவை ஏராளமானவர்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பார்க்கும் போதே இது போலியான நியூஸ் கார்டு என்று தெரிகிறது. இருப்பினும் நூற்றுக் கணக்கானோர் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் உண்மை என்று நினைத்துப் பதிவிட்டார்களா, நய்யாண்டியாக பதிவிட்டார்களா என்ற ஆய்வுக்குள் செல்லவில்லை. ஏராளமானவர்கள் பதிவிட்டு வருவதால் இது பற்றி ஆய்வு நடத்தினோம்.
முதலில் புதிய தலைமுறை வெளியிட்ட அசல் நியூஸ் கார்டை தேடினோம். நவம்பர் 24ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு தொடர்பாக மூன்று நியூஸ் கார்டுகள் வெளியிடப்பட்டு இருந்தது.

அவற்றில் ஒன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் இருந்தது போன்று ஒரு நியூஸ் கார்டு இருந்தது. அதில், “மழை பெய்வதை பொறுத்துத்தான் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு” என்று இருந்தது.
இந்த நியூஸ் கார்டை எடுத்துத்தான் மாற்றி பதிவிட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதை உறுதி செய்ய புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு ஹெட் மனோஜை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது இது போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தார்.

எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி மற்றும் அறிவிப்பு பற்றி வெளியான செய்திகளைப் பார்த்தோம். அரசியல் கலந்து குறிப்பாக ராமதாஸ் பற்றி அவர் எதையும் கூறவில்லை என்பது தெரிந்தது.
அசல் பதிவைக் காண: vikatan.com I Archive
இதன் அடிப்படையில் டாக்டர் ராமதாசையும் நிவர் புயலையும் ஒப்பிட்டு முதல்வர் பழனிசாமி பேசியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நிவர் புயலையும் டாக்டர் ராமதாசையும் தொடர்புபடுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ராமதாஸ், நிவர் புயலை ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் போலிச் செய்தி!
Fact Check By: Chendur PandianResult: Altered
