FACT CHECK: 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அதிசய பிப்ரவரி 2022 என்று பரவும் வதந்தி!

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

வருகிற 2022 பிப்ரவரி மாதம் அதிசய மாதம் என்றும் 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக் கூடிய சிறப்பான மாதம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

போட்டோ பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிசய மாதம். வரும் பிப்ரவரி உங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒருபோதும் வராது. ஏனெனில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஞாயிறுகள், 4 திங்கள், 4 செவ்வாய், 4 புதன், 4 வியாழன், 4 வெள்ளி மற்றும் 4 சனிக்கிழமைகளைக் கொண்டுள்ளது. இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. இது பணம் பைகள் என்று அழைக்கப்படுகிறது. எனவே, குறைந்தது 5 நபர்கள் அல்லது 5 குழுக்களுக்கு அனுப்புங்கள், பணம் 4 நாட்களில் வரும். சீன ஃபெங் சுய் அடிப்படையில். படித்த 11 நிமிடங்களுக்குள் அனுப்பவும்” என்று இருந்தது.

இந்த பதிவை கரிசக்காட்டுப்பூவே என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Mathiayzhagan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 டிசம்பர் 15ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தற்போதைய ஆங்கில நாட்காட்டி என்பது கி.மு 45ல் ரோம அரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் நாட்காட்டியின் திருத்தப்பட்ட வடிவமாகும். கத்தோலிக்கர்களின் தலைவராக கருதப்படும் போப் கிரகோரி என்பவர் நாட்காட்டியைச் சீர்படுத்தி வெளியிட்டார். இதனால் இதற்கு கிரகோரியன் நாட்காட்டி என்றும் பெயர். இந்த கிரகோரியன் நாட்காட்டி என்பது 1582ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. இந்த நாட்காட்டியில் பிப்ரவரி மாதத்துக்கு 28 நாட்கள். லீப் ஆண்டில் மட்டும் 29 நாட்கள் வரும். 

பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் நான்கு ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகள் வரும். லீப் ஆண்டில் மட்டும் ஏதாவது ஒன்று ஐந்து நாட்களாக இருக்கும். உதாரணத்துக்கு 2024ம் ஆண்டு லீப் ஆண்டாக உள்ளது. அந்த மாதத்தின் முதல் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. எனவே, 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஐந்து வியாழக்கிழமைகள் இருக்கும்.

மற்றபடி 2021, 2022, 2023 ஆண்டுகளில் பிப்ரவரி மாதங்களில் வார நாட்கள் நான்கு முறை மட்டுமே வருகின்றன. அதற்கான படத்தை கீழே கொடுத்துள்ளோம். லீப் ஆண்டு தவிர்த்து மற்ற எல்லா ஆண்டுகளிலும் பிப்ரவரி மாதத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகள் நான்கு முறை வரும். 

2021 I 2022 I 2023

உண்மை இப்படி இருக்கும்போது மிக அதிசய நிகழ்வு, 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசய நிகழ்வு என்று கூறியிருப்பது போலியானது என்று உறுதியாகிறது. லைக்‌ஸ், ஷேர் அதிகம் வாங்க வேண்டும் என்பதற்காக யாரோ உருவாக்கிய பதிவை, உண்மை என்ன என்று தெரியாமல் பலரும் ஷேர் செய்து வருவது தெரிகிறது. இதே வதந்தியை ஒவ்வொரு ஆண்டும் பகிர்ந்து வந்திருப்பதையும் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook 

லீப் ஆண்டுகள் தவிர்த்து மற்ற எல்லா ஆண்டுகளிலும் பிப்ரவரி மாதத்தில் ஞாயிறு முதல் சனி வரையிலான வார நாட்கள் நான்கு முறை வரும் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில், 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அதிசய 2022 பிப்ரவரி மாதம் என்று பகிரப்படும் பதிவு தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 823 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அதிசய மாதம் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அதிசய பிப்ரவரி 2022 என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False