இடைத்தேர்தலில் தி.மு.க கொடுத்த குக்கர் வெடித்ததா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கொடுத்த குக்கர் வெடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தந்தி டிவி வெளியிட்ட வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “திடீரென வெடித்து சிதறியது ஓட்டுக்காகக் கொடுத்த குக்கர்… வெந்துபோனது பெண்ணின் முகம், கை… பீதியில் இலவசம் பெற்ற மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு கீழே, தி.மு.க தலைவர்கள் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “ஓட்டுக்காக கொடுக்கும் லஞ்சத்திலும் ஊழலா..??? ஊழலுக்கு பிறந்த ஊழல்வாதிகளா..!!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பதிவை Ntk Kavarapettai என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி வெற்றிக்காக தி.மு.க பல்வேறு வகையில் உதவி வருகிறது. தி.மு.க-வினர் மக்களுக்குக் குக்கர் உள்ளிட்ட இலவச பொருட்களை வழங்கி வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில் குக்கர் வெடித்தது என்று குறிப்பிட்டு, தி.மு.க ஓட்டுக்கு கொடுத்த லஞ்சத்திலும் ஊழல் செய்துள்ளது என்று பலரும் பதிவிட்டு வரவே அது பற்றி ஆய்வு செய்தோம். சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் குக்கர் வெடித்ததாகச் செய்தி வெளியானது. அந்த செய்தியில் இடம் பெற்றிருந்த காட்சிகள் போல இருந்ததால், தந்தி டிவி-யில் வெளியான அந்த செய்தியை தேடி எடுத்தோம். 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்பட பதிவில் இருந்த படம், அந்த வீடியோவின் முகப்பு படமாக இருப்பது தெரிந்தது. அந்த செய்தியை பார்த்தோம். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் பல அரசியல் கட்சிகளும் மக்களுக்கு இலவச பொருட்களை விநியோகித்து வருகின்றன. அப்படி இலவசமாக பெற்ற குக்கரை பயன்படுத்தி சமைத்த போது, அது வெடித்து என்று குறிப்பிட்டிருந்தனர். பா.ஜ.க-வினர் குக்கர் கொடுப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும், அவர்கள் பா.ஜ.க-வினர் என்று தந்தி டிவி குறிப்பிடவில்லை.

கர்நாடகாவில் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சி ஒன்று இலவசமாக கொடுத்த குக்கர் வெடித்த தகவலை, தமிழகத்தில் நடந்தது போன்று விஷமத்தனமாக பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பெங்களூருவில் அரசியல் கட்சியினர் கொடுத்த பிரஷர் குக்கர் வெடித்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போல தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இடைத்தேர்தலில் தி.மு.க கொடுத்த குக்கர் வெடித்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False