இந்திய பிரதமர் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கியதாகப் பரவும் வதந்தி…
‘’பிரதான் மந்திரி இலவச லேப்டாப் திட்டம் தொடங்கியது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ பிரேக்கிங் நியூஸ்! PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது. எங்கள் திட்டம் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்குத் திறந்திருக்கும், சொந்த மடிக்கணினிகளை வாங்க இயலவில்லை, ஆனால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஒன்று தேவை. விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, இடங்கள் குறைவாகவே உள்ளன! விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே மடிக்கணினிகள் வரத் தொடங்கியுள்ளன. காலக்கெடுவை:04/29/2024. இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதேபோன்று மேலும் ஒரு டெம்ப்ளேட் வைரலாகப் பகிரப்படுகிறது.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, இது ஒரு வதந்தி என்று ஏற்கனவே All India Council for Technical Education (AICTE) விளக்கம் அளித்துள்ளதாக, விவரம் தெரியவந்தது.
அடுத்தப்படியாக, பாகிஸ்தான் கொடி மற்றும் அந்நாட்டு பிரதமர் Shehbaz Sharif படத்துடன் பகிரப்படும் மற்றொரு தகவலையும் ஆய்வு செய்தோம்.
இதன்படி, பாகிஸ்தான் நாட்டில் இத்தகைய திட்டம் நடைமுறையில் உள்ளது, உண்மைதான். கடந்த 2013ம் ஆண்டு அந்நாட்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இளம் தலைமுறையினர் மேற்படிப்பு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்நிலையில், தற்போதைய பிரதமர் Shehbaz Sharif கடந்த மே 30, 2023 முதலாக, மீண்டும் இலவச லேப்டாப் திட்டம் தொடங்கப்படுவதாக, அறிவிப்பு வெளியிட்டார்.
இதுதொடர்பாக, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பயனாளிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ இணையதள முகவரி இதோ…
Pakistan Prime Minister Laptop Scheme 2023
எனவே, பாகிஸ்தான் நாட்டில் வெளியிடப்பட்ட இலவச லேப்டாப் திட்ட அறிவிப்பு செய்தியை எடுத்து, இந்திய பிரதமர் வெளியிட்டது போன்று தவறாகச் சித்தரித்து, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகின்றனர், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:இந்திய பிரதமர் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கியதாகப் பரவும் வதந்தி…
Written By: Fact Crescendo TeamResult: False