FACT CHECK: விடுதலைச் சிறுத்தைகள் மீது திமுக சாதி வெறி காட்டுகிறது என்று வைகோ கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

அதிகாரம் கையில் இருப்பதால் வி.சி.க மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் சாதி வெறியை தி.மு.க நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிகாரம் கையில் இருப்பதால் திமுக விசிக மேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சாதிவெறியை நிறுத்திக்கொள்ள வேண்டும். – திரு.வைகோ” என்று இருந்தது.

இந்த பதிவை BJP Tamilnadu Official என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sampath Kumar என்ற ஐ.டி கொண்ட நபர் 2021 செப்டம்பர் 26ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீப காலமாக செய்தி ஊடகங்கள் வெளியிடும் நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமான தகவலை பலரும் ஷேர் செய்து வருவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவாக தி.மு.க-வை வைகோ விமர்சித்தது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டு இல்லை. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் தேதி அழிக்கப்பட்டிருந்தது. மேலும் வழக்கமாக “திரு” என்று குறிப்பிட்டு அழைப்பது எல்லாம் ஊடகங்களில் பின்பற்றப்படுவது இல்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதிபடுத்துகிறது. ஆனால், இதையும் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். 

எனவே, நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட அசல் நியூஸ் கார்டை தேடினோம். சமீபத்தில் வைகோ புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் எந்த ஒரு நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை. சற்று பின்னோக்கி தேடிப் பார்த்த போது, 2021 செப்டம்பர் 15ம் தேதி நியூஸ் 7 தமிழ் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை வெளியிட்டிருந்தது கிடைத்தது.

அதில், “திமுக கூட்டணியில் மதிமுக போட்டி. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து தவறான தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு விசாரித்த போது, அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது, தி.மு.க சாதி வெறியோடு நடந்துகொள்கிறது என்று வைகோ கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

விடுதலைச் சிறுத்தைகள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சாதி வெறியை தி.மு.க நிறுத்த வேண்டும் என்று வைகோ கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:விடுதலைச் சிறுத்தைகள் மீது திமுக சாதி வெறி காட்டுகிறது என்று வைகோ கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False