
‘’கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் விறகு அடுப்பில் சமைக்க பழகிக் கொள்ளுங்கள்,’’ என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக, புதிய தலைமுறை பெயரில் ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
நமது வாசகர் ஒருவர் இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று கேட்டு, நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை பகிர்ந்து வருவதைக் கண்டோம்.
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
உண்மை அறிவோம்:
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி தற்போது புதிய தலைமுறை எதுவும் நியூஸ் கார்டு வெளியிட்டனரா என்று தகவல் தேடினோம். அவர்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டபோது, இதுபோன்ற செய்தி எதையும் அவர்கள் வெளியிடவில்லை என தெரியவந்தது.
எனவே, புதிய தலைமுறை ஆன்லைன் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலி நியூஸ் கார்டு,’’ என்று குறிப்பிட்டனர்.
இதற்கடுத்தப்படியாக, சமீபத்தில் ஏதேனும் நிர்மலா சீதாராமன் பற்றி ஊடகங்களில் பற்றி செய்தி வெளியானதா என விவரம் தேடினோம். 2021-22 பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டு வருவதாக, ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட விவரம் கிடைத்தது.
எந்த செய்தியிலும், சமையல் எரிவாயு விலைவாசி பற்றி கவலைப்படுபவர்கள், விறகுக்கட்டையில் சமைக்கலாம், என்று அவர் கூறியதாகக் குறிப்பிடவில்லை.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்த தகவல் தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சமையல் எரிவாயு பயனாளர்களை கேலி செய்தாரா நிர்மலா சீதாராமன்?
Fact Check By: Pankaj IyerResult: False
