FACT CHECK: கொரோனா நிவாரண நிதி பெற முன்பதிவு செய்யுங்கள் என்று பியூஷ் மனுஷ் நம்பரை பரப்பிய விஷமிகள்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

கொரோனா நிவாரண நிதி ரூ.2500 பெற 9443248582 என்ற எண்ணிற்கு போன் செய்து முன்பதிவு செய்ய வேண்டும் என்று தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மு.க.ஸ்டாலின் தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட படத்துடன் கூடிய திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதல் வாக்குறுதி நிறைவேற்றம். 9443248582 என்ற எண்ணிற்குக் கால் செய்து கொரோனா நிவாரண நிதி 2500 ரூபாயை பெற இப்பொழுதே முன்பதிவு செய்யுங்கள் செய்யுங்கள்..!” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நிலைத் தகவலில், நான் பண்ணிட்டேன் நீங்க…! 9443248582 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Sabari R என்பவர் மே 2, 2021 அன்று பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலில் கொரோனா நிவாரண நிதி ரூ.4000ம் வழங்கப்படும் என்றும் முதல் தவணையாக ரூ.2000ம் தற்போது வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி முதல் தவணையாக ரூ.2000ம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொலைபேசி எண் ஒன்றைக் குறிப்பிட்டு நிவாரண நிதி ரூ.2500 பெற முன்பதிவு செய்யுங்கள் என்று குறிப்பிடவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

முதலில் இந்த நியூஸ் கார்டை தி.மு.க வெளியிட்டதா என்று பார்த்தோம். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது படி மே 2ம் தேதி இது தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டையும் தி.மு.க வெளியிடவில்லை. தொடர்ந்து தேடிய போது கடந்த 2021 மார்ச் மாதம் தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தயாரிக்கப்பட்ட புகைப்பட பதிவை எடுத்து எடிட் செய்திருப்பது தெரிந்தது.

இந்த தொலைபேசி எண் யாருடையது என்று டயல் செய்து பார்த்தோம். அது சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷின் செல்போன் நம்பர் என்று தெரிந்தது. இந்த நம்பர் மூலம் தன்னைத் தொடர்புகொள்ளும்படி அவர் பல பதிவுகள் வெளியிட்டிருந்ததும் நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் பெயரில் ஏற்கனவே சபரிமலை விவகாரத்தின் போது, மகரஜோதிக்கு என் மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் என்று பியூஷ் மனுஷ் கூறியதாக வதந்தி பரப்பப்பட்டது. தொடர்ந்து அவரைப் பற்றி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த கோபத்தில் அவரது நம்பரை வைத்து போலியாக நியூஸ் கார்டை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர் என்பது தெரிந்தது. 

இதன் அடிப்படையில் அரசின் கொரோனா நிவாரண நிதி ரூ.2500 பெற முன்பதிவு செய்யுங்கள் என்று பரவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவி பெற முன்பதிவு செய்யுங்கள் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கொரோனா நிவாரண நிதி பெற முன்பதிவு செய்யுங்கள் என்று பியூஷ் மனுஷ் நம்பரை பரப்பிய விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False