
‘’கனிமொழி, திருமாவளவனுக்கு பரிசு கொடுத்தோம்- கோத்தபய ராஜபக்சே வாக்குமூலம்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770), வாசகர்கள் சிலர் அனுப்பி நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை பலரும் ஷேர் செய்வதை கண்டோம்.
உண்மை அறிவோம்:
இதன்படி, ‘’விடுதலைப் புலிகள் தலைவன் பிரபாகரனை நாயை போல் இழுத்து வந்து நடுரோட்டில் வைத்து நாங்கள் கொன்றோம். இதற்கு இந்தியாவில் அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தது. போர் முடிந்து, இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய குழுவில் இருந்த கனிமொழிக்கும், திருமாவளவனுக்கும் இதுபற்றி விரிவாக கூறினோம். அதை அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். பிறகு பரிசுப் பொருட்களையும் வாங்கிக் கொண்டுதான் போனார்கள்,’’ என்று கூறியுள்ளனர்.
இதனை பார்ப்பதற்கு, கோத்தபய ராஜபக்சே, போர்க் குற்றங்களை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்தது போல உள்ளது. ஆனால், அவர் அப்படி உண்மையில் பேசியிருந்தால், அது சர்வதேச அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கும்.
ஏனெனில், கடந்த 2008-09 காலக்கட்டத்தில் இலங்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஏராளமான போர் விதிமீறல் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டு வருகிறது.
போர் நடைபெற்ற காலத்தில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, அவரது சகோதரரும் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபக்சே உள்ளிட்டோர் மீது போர்க்குற்றம் புரிந்ததாகக் கூறி சர்வதேச அரங்கில் அரசியல் ரீதியான அழுத்தம் தரப்பட்டு வருகிறது.
தற்போது கோத்தபய ராஜபக்சே அதிபராகவும், அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் பதவியேற்றுள்ளனர். இதையடுத்து, போர்க்குற்றம் தொடர்பாக நீதி கேட்கும் முன்னெடுப்புகள் சர்வதேச அரங்கில் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் பரவி வருகிறது. உண்மையிலேயே, அவர் அப்படி பேசியிருந்தால், அது போர்க்குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அமையும் என்பதால், நமது இலங்கைப் பிரிவினர் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டோம்.
அவர்கள், கோத்தபய ராஜபக்சே பேசிய குறிப்பிட்ட நிகழ்வின் முழு வீடியோ லிங்கை பெற்று தந்தனர்.
இந்த வீடியோவில், ‘’பாதுகாப்புச் செயலாளராக அமைதியாகவே இருந்தேன். தேவையின்றி என் மீது குண்டுவெடிப்பு நடத்தி பிரபாகரன் வேலையை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலில் இருந்து நாய் போல இழுத்து வந்து கதையை முடித்து வைத்தேன்,’’ என்றே கோத்தபய பேசுவதாக, நமது இலங்கை குழுவினர் குறிப்பிட்டனர்.
‘’இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி உதவியுடன் போரை முடித்தோம், கனிமொழி, திருமாவளவனுக்கு பரிசுகள் வழங்கி சமாதானம் செய்தோம்,’’ என்றெல்லாம் இந்த வீடியோவில் அவர் பேசவில்லை.
அடுத்தப்படியாக, கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்தை (இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரிவு) தொடர்பு கொண்டு, நமது குழுவினர் விளக்கம் கேட்டனர்.
‘’பிரபாகரனை நாய் போல இழுத்து வந்து கதையை முடித்தேன் என்று பேசியது உண்மையே. மற்றபடி, கனிமொழி, திருமாவளவன் பற்றியோ, இந்திய அரசு உதவி செய்ததாகவோ அவர் பேசவில்லை,’’ என்றனர்.
இலங்கையில் 2009ல் உள்நாட்டுப் போர் முடிந்த பின், இந்தியா சார்பாக, எம்பி.,க்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், கனிமொழி, டி.ஆர்.பாலு, திருமாவளவன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், அதனை குறிப்பிட்டு கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்ட வீடியோவில் எதுவும் பேசவில்லை.
இது உணர்ச்சிகரமான விவகாரம் என்பதால், கோத்தபய ராஜபக்சே பேசியதாகக் கூறி பகிரப்படும் தகவலில் முழு விவரம் இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கோத்தபய ராஜபக்சே அளித்த சர்ச்சை பேட்டி; முழு விவரம் என்ன?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
