
நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்துகொண்டு வேண்டுமென்றே மக்களை உதயநிதி குழப்பி வருகிறார், அவர் உண்மையைப் பேச வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உதயநிதி உண்மை பேச வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்துகொண்டு வேண்டும் என்றே மக்களையும் மாணவர்களையும் உதயநிதி குழப்பி வருகிறார். காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம்” என்று இருந்தது.
இந்த பதிவை Sreekala Remanan BJP என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2022 பிப்ரவரி 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் பெயரை கார்த்திக் சிதம்பரம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாகத் தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இது போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
முதலில் தந்தி டிவி இப்படி ஏதும் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அதில் கார்த்தி சிதம்பரம் தொடர்பாக எந்த நியூஸ் கார்டும் இல்லை. மேலும் தந்தி டிவி வெளியிடும் இந்த மாதிரியான வடிவமைப்பு கொண்ட நியூஸ் கார்டில் “JUSTIN” என்று குறிப்பிடுகின்றனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் அது இல்லை. மேலும், தந்தி டிவி லோகோ மேலே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் நடுவில் இருந்தது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன. இதைத் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பி வைத்தோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

கார்த்தி சிதம்பரம் இப்படி ஏதும் கருத்து தெரிவித்துள்ளாரா என்று அறிய கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, கார்த்தி சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதில், யாரோ ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்திருந்ததை எடுத்து, கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்திருந்தார். அதில், “இது போலியான செய்தி. இப்படி போலியான போட்டோஷாப் செய்யப்பட்ட செய்தியைப் பரப்புவது பாஜக இந்தியாவின் வழக்கமாக உள்ளது. குறைந்த பட்சம் என்னுடைய பெயரையாவது சரியாக குறிப்பிடுங்கள்” என்று கூறியிருந்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் உண்மை பேச வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியதாக பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உதயநிதி ஸ்டாலின் உண்மை பேச வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:உதயநிதி உண்மை பேச வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
