ஓட்டு போட்ட மக்களுக்கு விடியல் அரசு அளித்த ஒட்டு போட்ட பழுதடைந்த தார் சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மோசமான தார் சாலையின் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "ஓட்டு போட்ட மக்களுக்கு ஒட்டு போட்ட ரோடுதான்! அது தாரையும் ஜல்லியையும் ஒட்டி வைக்கும் ரோடுதான்! ஒட்டுவதில் கில்லாடிகள் அவர்கள், விடியல் போஸ்டர் ஒட்டுவார்கள்! மத்திய அரசின் நலத்திட்டங்களை மாநில திட்டங்களாக ஸ்டிக்கர் ஒட்டுவர்கள்!

மொத்தத்தில் அவர்கள் ஒட்டுவதில் கைதேர்ந்த கயவர் கூட்டம்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு 2023 நவம்பர் 6ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

தி.மு.க ஆட்சியில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சாலைகள் மோசமாக உள்ளது என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இந்த புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் விடியல் போஸ்டர், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசையே குற்றம்சாட்டுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

எனவே, இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, 2017ம் ஆண்டில் இருந்து இந்த புகைப்படம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் இந்த புகைப்படத்தை 2017ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி தன்னுடைய செய்தி ஒன்றில் பயன்படுத்தியிருந்தது தெரிந்தது. அதில் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மே மாதம் தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஆனால், 2017ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் சமூக. செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. மேலும், இந்த புகைப்படம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்தது என்று இந்தஸ்தான் டைம்ஸ் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஓட்டு போட்ட மக்களுக்கு விடியல் அரசு வழங்கிய ஒட்டு போட்ட பழுதடைந்த சாலை என்று பரவும் புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘ஓட்டு போட்ட மக்களுக்கு கிடைத்த ஒட்டு ரோடு’ என்று பரவும் புகைப்படம் தமிழ்நாட்டில் எடுத்ததா?

Written By: Chendur Pandian

Result: Misleading