அண்ணாவை கை ரிக்‌ஷாவில் அமர வைத்து இழுத்த ஈ.வெ.கி.சம்பத்; உண்மை என்ன?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’அண்ணாவை கை ரிக்‌ஷாவில் அமர வைத்து இழுத்த ஈ.வெ.கி.சம்பத். இவர்களின் வாரிசுகள்தான் (திமுக) தற்போது தருமபுரம் ஆதீனம் போன்றவர்களை பல்லக்கு பயன்படுத்த தடை விதிக்கிறார்கள்,’’ எனக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றினை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். 

இதே தகவலை பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்திற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை மையப்படுத்தி பலவித பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் சில வதந்திகளும் உள்ளதால், அவை பற்றி நாமும் அவ்வப்போது ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Link

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு நம்பகத்தன்மை இல்லாத தகவல்தான் மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் பற்றிய பதிவும்.

இதுதொடர்பாக நாம் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினருமான குமாரதேவன் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். இந்த புகைப்படத்தை பார்வையிட்ட அவர், ‘’திமுக தொடங்கப்படும் முன்பாக, திராவிடர் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அண்ணா, ஈரோட்டில் தங்கி, தந்தை பெரியார் நடத்திய குடி அரசு பத்திரிகையில் பணிபுரிந்தார். அப்போது, அண்ணாவிற்கும், சம்பத்திற்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. ஒருமுறை ஓய்வு நேரத்தில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, விளையாட்டிற்காக அண்ணாவை கை ரிக்‌ஷாவில் அமர வைத்து ஒரு சிறிய இடத்தில் கொஞ்ச நேரம் இழுத்து, சுற்றி வர சம்பத் ஆசைப்பட்டார். அதன்படி, அவரை கை ரிக்‌ஷாவில் அமர வைத்து இருவரும் மாறி மாறி விளையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. ஆனால், பின்னாளில், அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து, பிறகு அண்ணா மறைந்து, கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக வந்தபோது, கை ரிக்‌ஷாவை தடை செய்தார். இந்த வரலாறு தெரியாமல், விளையாட்டு நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை, எதோ சம்பத்தை அடிமை போல அண்ணா பயன்படுத்தினார் எனக் குறிப்பிட்டு இப்படி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று குறிப்பிட்டார்.

மேலும், அண்ணாவை அமர வைத்து சம்பத் ரிக்‌ஷா இழுப்பது போலவே, சம்பத்தை வைத்து அண்ணா ரிக்‌ஷா இழுக்கும் புகைப்படமும் இணையத்தில் காணக் கிடைக்கிறது.

இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம்.

எனவே, ஓய்வு நேரத்தில், அண்ணாவும், சம்பத்தும் விளையாட்டாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது பகிர்ந்து, சம்பத்தை அடிமை போல அண்ணா வேலைவாங்கினார் எனக் குறிப்பிட்டு வதந்தி பரப்புகிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:அண்ணாவை கை ரிக்‌ஷாவில் அமர வைத்து இழுத்த ஈ.வெ.கி.சம்பத்; உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading