
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் டயரில் பணத்தை மறைத்துவைத்து பா.ஜ.க-வினர் கடத்துவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
டயர் ஒன்றிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.2000ம் நோட்டு பணத்தை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடக தேர்தலையொட்டி பணத்தை டயரில் வைத்து கடத்திய பாஜகவினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை Tamil Professor 2 என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மே 8ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்குக் கொடுக்கக் கொண்டு செல்லப்பட்டதாகப் பல கோடி ரூபாயைத் தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியது. இந்த நிலையில் டயரில் பணத்தை மறைத்து எடுத்து சென்ற பா.ஜ.க என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive
வீடியோவை புகைப்பட காட்சிகளாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ காட்சியுடன் 2019ம் ஆண்டு என்டிடிவி ஜீ நியூஸ் இந்தி உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது. அந்த செய்தியைப் பார்த்தோம். 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பெங்களூருவிலிருந்து கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா பகுதிக்குச் சென்ற காரை வருமான வரித்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக இருந்த டயர் ஒன்றை சோதனை செய்தனர். அதிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.2000ம் நோட்டு எடுக்கப்பட்டது. 2.3 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த வீடியோவும் பகிரப்பட்டிருந்தது. அந்த வீடியோதான் நாம் தற்போது ஆய்வு செய்யும் வீடியோ என்பது பார்க்கும் போது தெரிந்தது. அந்த செய்தியில் பணத்தைக் கடத்தியது பா.ஜ.க என்று குறிப்பிடப்படவில்லை. எந்த கட்சியினர் இந்த செயலை செய்தது என்று தகவல் இல்லை. இதன் மூலம் பழைய வீடியோவை எடுத்து. பா.ஜ.க-வினர் வாக்காளர்களுக்கு விநியோகிக்க டயரில் பணத்தை மறைத்து எடுத்துச் சென்றனர் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாடகாவில் காரில் பணம் கடத்தப்பட்ட வீடியோவை வைத்து தற்போது சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பா.ஜ.க-வினர் பணத்தை கடத்தினர் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கர்நாடகா தேர்தல்: டயரில் பணத்தை கடத்திய பா.ஜ.க-வினர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
