
தேர்தலில் தோல்வியடைந்தால் தன்னுடைய 3000 கோடி ரூபாய் சொத்தை மக்களுக்கு வழங்குவேன் என்று ஸ்டாலின் அறிவிப்பு என்று சமூக ஊடகங்களில் ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive
சன் நியூஸ் வெளியிட்டது போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு threads.com-ல் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் சவால். நான் தேர்தலில் தோற்றால், என்னுடைய 3000 கோடி ரூபாய் சொத்தை மக்களுக்கு இலவசமாக வழங்குவேன் – MK Stalin” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தேர்தலில் தோல்வியடைந்தால் தன்னுடைய 3000 கோடி ரூபாய் சொத்தை மக்களுக்கு வழங்குவேன் என்று ஸ்டாலின் கூறியது போன்று ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது மு.க.ஸ்டாலின் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.6.62 கோடி என்று தெரிவித்திருந்தார். அதனால், ரூ.3000 கோடியை மக்களுக்கு வழங்குகிறேன் என்று கூறியிருக்க வாய்ப்பில்லை.
நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்டை பார்க்கும் போதே எடிட்டிங் கூட சரியாக தெரியாத நபர் இதை போலியாக உருவாக்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதையும் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தேர்தல் வாக்குப்பதிவு அன்று ஸ்டாலின் வாக்களித்த புகைப்படத்தை வைத்த இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சன் நியூஸ் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை எடிட் செய்து இதை போலியாக உருவாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சன் நியூஸ் டிவி-யின் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டை 23 ஏப்ரல் 2026 அன்று வெளியிட்டிருப்பது தெரிந்தது.
ஆனால் அதில். “வாக்களித்தார். சென்னை: தேனாம்பேட்டை SIET கல்லூரியில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறாக பதிவிட்டிருப்பது இதன் மூலம் தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள இந்த நியூஸ் கார்டை சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தேர்தலில் தான் தோல்வியுற்றால் தன்னுடைய ரூ.3000 கோடி சொத்துக்களை மக்களுக்கு வழங்குவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


