மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா, அமைச்சர்களுக்கு இடையே மோதல் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா என்றும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக முதலமைச்சருக்கு கொரனா தொற்று. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கொரனா தொற்று உறுதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்” என்று இருந்தது.

நிலைத் தகவலில் “அரசு மருத்துவமனையில் என்ன பிரச்சினை முதல்வரே” என்று இருந்தது. இந்த பதிவை Sunil Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகப் பலரும் சமூக ஊடகங்களில் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது முக்கிய செய்தியாக ஒளிபரப்பப்பட்டு இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் ஜனவரி 21, 2022 அன்று வெளியாகவில்லை. அதே நேரத்தில் பல்வேறு திட்டப்பணிகளை ஸ்டாலின் தொடங்கிவைத்ததாகச் செய்திகள் வெளியாகின. 

இந்த நியூஸ் கார்டு தந்தி டிவி வெளியிட்டது போல இல்லை. இதன் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் ஃபாண்ட் போல இல்லை. மேலும் “கொரோனா” என்பதை “கொரனா” என்று பிழையாகக் குறிப்பிட்டுள்ளனர். இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தது.

இதை ஆதாரப்பூர்வமாக உறுதி செய்ய, தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அப்போது இது “FAKE NEWS” என்று முத்திரை குத்தி பதிவிட்டிருந்தனர்.

அதே போல், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இது போலியான நியூஸ் கார்டு என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது. அரசு தரப்பிலிருந்தும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா என்று பரப்பப்படும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

இவற்றுக்கிடையே மேலும் இரண்டு போலியான நியூஸ் கார்டு பற்றி தந்தி டிவி விளக்கம் அளித்திருந்தது. அவற்றைப் பார்த்தோம். தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இருவருக்கு ஒருவர் தாக்கி பேட்டி அளித்தது போன்று சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டுகள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை தாங்கள் வெளியிடவில்லை என்று தந்தி டிவி விளக்கம் அளித்திருந்தது. இது தொடர்பாகவும் ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive

கே.என்.நேரு புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டில், “பிடிஆர் தியாகராஜனுக்கு கேஎன் நேரு அறிவுரை. பிடிஆர் அமைச்சரவையைச் சரியாக நிர்வகிக்கவில்லை அவருடைய முதிர்ச்சியற்ற தன்மையால் கழக அரசுக்கு பல கெட்ட பெயர் இப்போது ஐடிவிங் பொறுப்பை மாற்றிக் கொடுத்தது தவறில்லை அவர் துறையில் ஒழுங்காக செயல்பட்டாலே எல்லோருக்கும் நல்லது அமைச்சர் கே.என்.நேரு” என்று இருந்தது. 

இதற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்தது போன்று மற்றொரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. அதில், “கே.என்.நேருவிற்கு பிடிஆர் பதிலடி. தன்னுடைய மாவட்ட செயலாளர் பதவியைக் கூட தக்க வைக்க முடியாமல் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் தன்னுடைய துறையை ஒழுங்காக கவனித்து அமைச்சர் பதவியை காப்பாற்றிக்கொண்ட பின் அடுத்தவருக்கு அறிவுரை சொல்லட்டும் அமைச்சர் பிடிஆர் தியாகராஜன்” என்று இருந்தது.

இவ்வளவு வெளிப்படையாகக் கட்சி விஷயங்களை யாரும் வெளியே கூற மாட்டார்கள். எனவே, கே.என்.நேரு இப்படி ஒரு கருத்தை வெளியிட்டாரா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. கே.என்.நேரு இவ்வாறு கூறாத சூழலில் அவருக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்திருக்க வேண்டியதே இல்லை.

மேலும், ஐடி விங் செயலாளர் பதவியிலிருந்து விலகியது ஏன் என்றும் பிடிஆர் விளக்கமும் அளித்திருந்தார். இந்த சூழலில் தந்தி டிவி-யும் இந்த இரண்டு நியூஸ் கார்டுகளும் போலியானது என்று விளக்கம் அளித்திருந்தது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகின்றன.

முடிவு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா என்று பரவும் நியூஸ் கார்டு  போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா, அமைச்சர்களுக்கு இடையே மோதல் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False