
ஊடகவியலாளர்களை பார்த்து பதில் சொல்ல முடியாமல் மோடி ஓ மை காட் என்று அலறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “டென்மார்க்கில் ஷாக் ஆன பிரதமர் மோடி. டென்மார்க்கில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் “ஓ மை காட்” என்று மட்டும் கூறிச் சென்ற மோடி. பிரதமர் மோடி ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கவில்லை என்ற புகார் உள்ள நிலையில் வீடியோ வைரல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Newsu Tamil என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட பக்கம் 2022 மே 4ம் தேதி பதிவிட்டுள்ளது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதை போன்று நக்கீரன் இதழ் வெளியிட்டதாக வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “டென்மார்க்கில் உள்ள இந்திய பத்திரிகையாளர்கள் திடீரென்று பிரதமரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மோடி ஓ மை காட் என்றார் என குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை VCK Chelladurai.N என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 5ம் தேதி பதிவிட்டுள்ளார். நிலைத் தகவலில், “வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் திடீரென்று மைக்கை நீட்டியதால், மிரண்டு போன இந்தியப் பிரதமர் மோடி. சொந்தமாக எதையும் பேசத் தெரியாத டிஜிட்டல் மோடிஜி.
தன்னையறியாமல் உச்சரித்த வார்த்தை தான் “ஓ மை காட்”. ஊடகங்களையே சந்திக்காத பிரதமர் மோடி அவர்களே… மக்களும் தான் உங்களின் செயலைப் பார்த்துச் சொல்கிறார்கள் “ஓ மை காட் ” என்று குறிப்பிட்டிருந்தார். இதையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவது இல்லை. இதை வைத்து பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்த நிலையில் அரசு முறை பயணமாக டென்மார்க் சென்ற பிரதமரிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முயன்றதாகவும், இதைச் சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி ஓ மை காட் என்று கூறியதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
டென்மார்க்கில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வின் வீடியோவைப் பார்த்தோம். பத்திரிகையாளர்கள் இந்தியில் பேசுகின்றனர். எனவே, இந்தி அறிந்தவர்களிடம் மோடி மற்றும் நிருபர்களுக்கு இடையே நிகழ்ந்த உரையாடலை மொழிபெயர்த்து தரும்படி கேட்டோம். வெளியே வரும் மோடியிடம், நிகழ்ச்சி தொடர்பாக செய்தி சேகரிக்க தங்களை அனுமதிக்கவில்லை என்று செய்தியாளர்கள் புகார் தெரிவித்தனர்.
அதற்கு மோடி, “நீங்கள் உள்ளே அனுமதிக்கவில்லையா… வெளியே இருந்தீர்களா… ஹோ மை காட்!” என்று கூறுகிறார். உடனே நிருபர்கள், இது பற்றி என்ன கூறுகின்றீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர், “இது எப்படி நடந்தது என்று விசாரிக்கிறேன். நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார் என்றனர்.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive 1 I inshorts.com I Archive 2
இது தொடர்பாக தேடிய போது புதிய தலைமுறையில் பிரதமர் மோடி ஏன் ஓ மை காட் என்று கூறினார் என்று செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதிலும் பத்திரிகையாளர்கள் முறையீடு தொடர்பாக விசாரிப்பதாகக் கூறிவிட்டு மோடி புறப்பட்டார் என்றே குறிப்பிட்டிருந்தனர்.
செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாத சூழலில், இது தொடர்பாக நிருபர்கள் புகார் தெரிவித்த காட்சியை பேட்டிக்குப் பயந்து ஓ மை காட் என்று மோடி கூறி சென்றார் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் ஓ மை காட் என்று பிரதமர் அலறினார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஓ மை காட் என்று மோடி பதறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Missing Context
