
ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் ஆர்.எஸ்.எஸ்-க்கு வெளிநாட்டிலிருந்து வரும் நிதி அதிகரிக்கும் என்று மோகன் பகவத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று மோகன் பகவத் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வெளிநாட்டு வாழ் இந்துக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் இருந்துதான் அதிக நிதி வருகிறது. ரூபாயின் வீழ்ச்சியால் நமக்கு வரும் நிதி அதிகரிக்கும் – நாகர்கோவிலில் நடந்த ஷாகா கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டை Nagore Anees என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 15ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ரூபாயின் வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. ஆனால், ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாகப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் மோகன் பகவத் அப்படி கூறியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். தமிழ் ஊடகங்கள் மட்டுமின்றி தேசிய ஊடகங்களிலும் அது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியிருக்கும். குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க எதிர்ப்பு ஊடகங்களிலாவது செய்தி வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
மோகன் பகவத் நாகர்கோவிலுக்கு வந்து சென்ற செய்தி கூட தமிழ் ஊடகங்களில் பெரிய அளவில் வெளியாகவில்லை. அப்படி இருக்கும் போது ஜூனியர் விகடனில் மட்டும் இந்த நியூஸ் வந்தது போன்று பகிர்ந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, ஆய்வு செய்தோம்.
ஜூனியர் விகடன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 14, 2022 அன்று வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அவற்றில் மோகன் பகவத் தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் பதிவிடப்படவில்லை. எனவே, இது போலியானது என்று தெரிந்தது. சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஒரு பாவச் செயல் என்று மோகன் பகவத் கூறியதாக ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு வைரல் ஆனது. அதே நியூஸ் கார்டை தற்போது எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

இது குறித்து ஜூனியர் விகடன் சமூக ஊடகப் பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டோம். இந்த நியூஸ் கார்டை அவருடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பினோம். அதைப் பார்த்துவிட்டு இது போலியான நியூஸ் கார்டு என்று அவரும் உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது என்று மோகன் பகவத் கூறியதாக பரவும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு தவறானது, போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து முர்மு ஆசி பெற்றார் என்று பரவும் தகவல் தவறானது என்றும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்றும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது என்று மோகன் பகவத் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
